பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 ஜூலை, 2017

கல்லூரி சீனியர் தங்கம் தென்னரசு

"தம்பி, நானே கூப்பிட இருந்தேன். கூப்பிட்டுடீங்க. கும்பகோணத்தில் இருந்து கிளம்பப் போறேன்", அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள், அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார்.

இன்று (22.07.2017) கங்கைகொண்டசோழபுரத்தில் , "தொல்லியல் கழகம் 27 ஆம் ஆண்டு கருத்தரங்கம்" நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அண்ணன் வந்தார். முன்னாள் அமைச்சராக அல்ல, தொல்லியல் ஆர்வலர் என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டிருந்தார். அண்ணன் கோமகன், உள்ளூர் செயலாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.

அண்ணன் தென்னரசு அவர்கள், பாண்டியன் ஆய்வு மையத்தின் நிறுவனர், வரலாற்று ஆர்வலர். அந்த வகையில், இன்றைய விழாவில் "ஆவணம்" நூலை வெளியிட்டு சிறப்பிக்க அழைக்கப் பட்டிருந்தார்.

நான் அரியலூரில் இருந்து கிளம்பி செல்வதற்குள், அண்ணன் வந்து விடுவாரோ என பதற்றம். ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறனை, ஜெயங்கொண்டம் குறுக்குசாலையில் காத்திருக்க சொல்லி இருந்தேன்.

நான் போய் சேர்வதற்குள் வந்து விட்டார் அண்ணன். மணிமாறன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். நான் வரவில்லை என்றவுடன், அருகே இருந்த கழகத் தோழர் ராஜயோகத்தின் குறுகலான இடத்தில் அமர்ந்து விட்டார்.

எனக்காக காத்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தொடர்ந்து வந்திருந்தால், எதிரில் வந்த நான் அவருடன் இணைந்திருப்பேன். ஆனாலும் காத்திருந்தார். "வாங்க, வாங்க சங்கர்", என்று வரவேற்றார், உள்ளூர்காரர் போல.

அண்ணன் அரசு அவர்களுக்கு நூல்கள் பரிசளித்தேன். அவருக்கு விருப்பமான பறவைகள் குறித்த நூல் "பறவைகளும் வேடந்தாங்கலும்", வண்ணதாசன் நூல் மற்றொன்று. நூல்களை கண்டாலே அண்ணன் முகம் மலரும், இன்றும்.

நான் செல்வதற்கு முன்பாகவே கழகத் தோழர்களோடு பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை தொடர்ந்தார். "சங்கர் சபைக்கு வராததை சில நேரங்கள்ல உணர்கிறேன்" என்று என் சபை செயல்பாடுகளை சொல்லி நெகிழ்வாக்கி விட்டார். கழகத் தோழர் பக்கத்தில் இருந்த டீக்கடையில் வாங்கி வந்து அளித்த டீயை மகிழ்வாய் அருந்தினார்.

நிகழ்ச்சி குருவாலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்றடைந்தோம். முழுதும் தொல்லியல் அறிஞர்கள், தொல்லியல் துறையில் பணியாற்றியோர், ஆர்வலர்கள் என அது வேறொரு உலகமாக இருந்தது.

அண்ணன் அரசு அவர்களை கண்டதும் ஒரு பரபரப்பு. உறவினரை கண்டது போல எல்லோரும் வரவேற்றனர். அமைச்சராக இருந்தவர் என்பதே தெரியாத அளவிற்கு பழகுபவர் என்பது கழகத் தோழர்களுக்கு தெரியும். ஆனால் அங்கும் அதே பாங்கு தான்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர் சொல்லி பேச, அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தமிழகத்தின் தொன்மை சின்னங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபடும், முகநூலில் இயங்கும் சகோதரர் சசிதரனை பார்த்தவுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். "வீர சோழன் அணுக்கப் படை" என டீ-சர்ட் அணிந்திருந்த அந்தத் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

தனவேல் ஐ.ஏ.எஸ், தொல்லியல் அறிஞர் சுப்பையா என ஒரு அறிஞர் பட்டாளமே குவிந்திருந்தது. மேடையில் அமர அண்ணன் தென்னரசு அவர்களை முதலில் அழைத்தனர். வழக்கமான அரசியல்வாதிகள், நடுவில் உள்ள நாற்காலியில் தான் அமர்வார்கள். ஆனால் இவர் ஓர் ஓரமான நாற்காலியாக பார்த்து அமர்ந்தார், மற்றவர்களை நடுவில் அமர்த்தினார்.

"ஆவணம்" நூலை அண்ணன் தென்னரசு வெளியிடுவார் என்று அறிவித்தார்கள். வெளியிடுவதற்காக காகிதத்தில் கட்டப்பட்டு, அங்கு இருந்த பல்வேறு புத்தகக் கட்டில் ஆவணத்தை தேடி எடுக்க நேரமாகியது.

"நூல் வெளியிடுவது எவ்வளவு சிரமம் என்பது இப்போது தான் புரிந்தது. தயாரான நூலையே வெளியிட இவ்வளவு நேரமாகிறது. அதிலும் இது தொல்லியல் நூல், அதனாலும் அதிக நேரம்" என நகைச்சுவை உணர்வோடு உரையை துவங்கியவர், கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் குறித்து ஒரு அறிஞருக்கான பார்வையோடு உரையாற்றினார்.

அடுத்த அவர் மாவட்டத்தில் இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உடனே புறப்பட வேண்டிய அவசரம். இருந்தாலும், இன்னும் இருவர் பேசும் வரை அமர்ந்திருந்து, பிறகே கிளம்பினார்.

ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லாத நிகழ்ச்சியாக இருந்தாலும், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உணர்ந்து, தன் வரலாற்று ஆர்வத்தின் அடிப்படையில், அறுநூறு கிலோமீட்டர் பயணித்து நிகழ்ச்சிக்கு வந்து சென்றதன் மூலமும், அங்கு அவரது செயல்பாட்டின் மூலமும் எனக்கு சில பாடங்களை நடத்திச் சென்றார் அண்ணன் தென்னரசு.

# கல்லூரி சீனியரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக