பிரபலமான இடுகைகள்

சனி, 29 மார்ச், 2014

வழக்கமாக நான் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை...

வழக்கமாக நான் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை, அது தனி நிகழ்வு என்பதால்.

போன வருடம் சொன்ன மாதிரியே, யாருக்கும் தெரியாமல் பிறந்தநாளை கடத்தி விடலாம் என்று இருந்தேன். ஆனால் மார்ச் 23 அன்று, தளபதி சுற்றுப்பயணம் என்று அறிவிப்பு வந்தது. கதை கிழிந்தது என்று அப்பவே முடிவுக்கு வந்துவிட்டேன்.

முன்தினம் இரவு 11.59. மூத்த மகன் சிவசரண் அழைத்தார் மொபைலில். வாழ்த்தினார். அடுத்து வாழ்விணையர் காயத்ரி வாழ்த்தினார். இரண்டாவது மகன் சிவசூர்யா, தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருப்பதால், அவருக்கு தெரியாது. மாலை, சொல்லவில்லை என கோபித்துக் கொண்டார்.

கடந்த வருடம் முகநூலில் வந்த செய்திகளால் மெல்ல பரவியிருந்தது. அதனால் விடியற்காலையே அரியலூர் வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன், வாழ்த்துகளை தவிர்ப்பதற்கு.

குன்னம் சென்று பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்த்தேன். அங்கிருந்து கிளம்பினேன். தளபதி அவர்கள் வரும் பாதையான அரியலூர், கீழப்பழூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி வரை பயணித்து ஏற்பாடுகளை பார்வையிட்டேன்.

முகநூல் உபயத்தால் ஓரளவு தோழர்களுக்கு தெரிந்து விட்டது, ஆங்காங்கு கைக்குலுக்கி வாழ்த்தினர். ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி மட்டும் கடந்த வருட நிகழ்வை நினைவு வைத்திருந்து சால்வையோடு துரத்தினார், வாழ்த்தினார் நிர்வாகிகளோடு.

காலையிலேயே மகேஷ் அழைத்த போதே லேசாக யோசனை, இன்னைக்கு பிளாஷ் நியூஸ் தான் என்று. மகேஷ் மனதார வாழ்த்தினார். மகேஷ்- ரைசிங் ஸ்டார் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

வாழ்த்துவதற்காக, முகநூல் பார்த்த நண்பர்களின் அழைப்பால், மொபைல் மெல்ல சார்ஜ் இழந்தது. சிதம்பரம் நுழைந்த போது, மொத்தமும் காலி. ஒரு கார் சார்ஜர் வாங்கி மீண்டும் உயிரூட்டினேன் மொபைலை.

அண்ணன் எம்.ஆர்.கே உதவியாளர் பாலமுருகனும், இளைஞரணி கார்த்தியும் வாங்கிக் கொடுத்த பிரியாணி தான் பிறந்தநாள் விருந்து.

வைத்தீஸ்வரன்கோவில் அடைந்தோம். முதல் நாள் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர், மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களுக்கு வாக்கு சேகரித்த தளபதி அவர்கள், சீர்காழியில் பிரச்சாரம் முடித்து, வைத்தீஸ்வரன்கோவிலில் தங்கியிருந்தார்.

பிரச்சாரத்திற்கு வந்த அண்ணன் திருமா, சால்வை போர்த்த பரபரப்பானது. பிற்ந்தநாள் கதை அனைவருக்கும் தெரிந்து விட்டது. வாழ்த்து மழை. நெளிந்தேன்...

தளபதி அவர்களை வரவேற்று வேட்டி அணிவித்தபோது, நம்ம மகேஷ் அருகில் வந்தார். தளபதி அவர்களை பார்த்து சொன்னார், “அண்ணனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்”. தளபதி உற்று பார்த்தார் புன்னகையோடு, கை பிடித்து குலுக்கினார்.

ஒரு அடி எடுத்து வைத்தவர், நின்றார். 

“எத்தனாவது பிறந்தநாள் சங்கர் ?” 
“45 அண்ணா”. 
“வாழ்த்துக்கள் !”

# வணக்கத்திற்குரிய தளபதி அவர்கள் உள்ளிட்ட வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!

திங்கள், 17 மார்ச், 2014

அப்பறவை மீண்டும் சிக்கிக் கொண்டிருக்கிறது...

அன்பு சகோதரர் அரங்கன்.தமிழின் முதல் கவிதை நூல் “மனம் காட்டிக் குறிப்பு”. 
வெளியீட்டு விழா நேற்று இனிது நடைபெற்றுள்ளது. நூலை வெளியிட்டவர் கவிவேந்தர் மு.மேத்தா. நூலை பெற்றுக் கொள்ள வேண்டிய நான் பங்கேற்க இயலாமல் போனது எம் மனம் வாட்டும் குறிப்பு.


                                             

மேத்தா அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுவது என் இலக்கிய சுய விவரக்குறிப்பில் கூடுதல் பலம் கொடுக்கும் என்பதாலும், என் மண்ணின் (அரியலூர்) கவிஞர் அரங்கன் கவிதைகளின் ரசிகன் என்ற முறையில் என் ரசிப்பை பகிர வேண்டும் என்பதாலும் முயற்சித்தேன்.

ஆனால் தேர்தல் பணி சுமை அழுத்திவிட்டது. அரங்கத்தில் பகிர இழந்த வாய்ப்பை உங்களோடு பகிர்ந்து மனச் சுமை குறைக்க விரும்புகிறேன்.

முகநூலில் தான் இணைந்தேன் அரங்கனோடு. ஆனால் கண்ணுக்கு தெரியாத பிணைப்புகள் பல ஏற்கனவே இருந்ததால், இணைப்பு வலுவானது. அவர் கவிதைகள் படிக்கத் தொடங்கிய பிறகு, அவர் ரசிகனானேன்.

அது போன்றே அவருக்கு முகநூலில் நட்பான “தினஇதழ்” நாளிதழின் முதன்மை ஆசிரியர் குமாரும் ரசித்திருக்கிறர். ரசித்தவர், இந்நூலை வெளியிட தூண்டி, உதவியது சிறப்பு. அவருக்கு நன்றி.

மனம் காட்டிக் குறிப்பு. நூலின் பெயரே மனம் குடைகிறது, மரம் கொத்திப் பறவை போல. இந்தக் கவிதைகள் ஆசிரியரின் மனம் காட்டும் குறிப்பு மட்டுமல்ல, படிக்கும் நம் மனதையும் தான்.

அவரது உணர்வுகளையே, வடித்திருக்கும் வார்த்தைகளின் வலிமையால் நம் உணர்வுகள் போல் எண்ண வைப்பது கவிஞரின் வெற்றி. எளிமையான வார்த்தைகள், ஆனால் கடுமையானக் கருத்துகள்.

அட, இதைத் தான் நாம் நினைத்திருந்தோம் என எண்ண வைக்கிறார், ஆனால் இப்படி வசப்படுத்தும் வார்த்தைகளால் இவரால் தான் சொல்ல முடியும் என்பது தான் அவரது கவிதைகளின் வெற்றி.

இக்கவிதைத் தொகுப்பை படித்து திளைக்கும் முடிவில் தான், இத்தொகுப்பின் முதல் கவிதையையே உணர்கிறோம்.

விடுதலையடைந்த அப்பறவை
மீண்டும் சிக்கிக் கொண்டிருக்கிறது
அக்கவிதையின்
மீளாச்சிறையில்...”


சிக்கித் தான் கொள்கிறோம், இக்கவிதைத் தொகுப்பின் கண்ணுக்கு தெரியாத மாயவலையில்.

இவரது கவிதையில் வெறும் கவிமயக்கம் மட்டும் இல்லை. சமூகத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் போது நம் மயக்கத்தை தெளிய வைக்கிறார். சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் செல்லும் போக்கை “மரண ஊர்வலத்து ஒதுங்குதலாய்
இயல்பாய் கடந்து போவீர்கள்” என்று சொடுக்குகிறார்.

“மணல் விடு தூது” கவிதையில் மணல் கொள்ளை குறித்து மனம் பதைக்கிறார். ‘என் இனிய துரோகி’ கவிதையில் 

கைகுலுக்கி,
தோள்கள் பற்றி,
கர்வப்புன்னகை கழற்றி வீசி,
நண்பா என்று
மார்பிலணைத்தும் கொல்லலாம்
’ என துரோகம் அழிக்க பாடம் நடத்துகிறார்.

கேட்கும் கேள்வியிலும், சொல்லும் பதிலிலும் இவ்வளவு விஷயமா என “கேள் சொல்” கவிதையில் ஆச்சரியப்படுத்துகிறார். “அமிலம் அடைக்கப்பட்ட பனித்துளி, ஆணிவேருக்குள் பூக்கும் மரம்” என புதிதாய் உவமைப்படுத்தி ஆதலால் செய்வீர், காதல் என கரைந்து போகிறார்.

ப்ரியங்களின்
சமரசமில்லா யுத்தத்தில்
நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்”
என்று கவிக் கனவுலகில் சஞ்சாரிப்பவர், 


“குட்டி யானையில் பயணிக்கின்றன
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள்
” என “விழாக்கால கோலத்தை விவரிப்பதற்கு, இயல் வாழ்க்கையின் நாட்டு நடப்பிற்கு சடக்கென்று குதிக்கின்றார். இது தான் இவர் வெற்றி எனக் கருகிறேன்.

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி, குப்பை பொறுக்கும் சிறுவர் வாழ்வு, தனிமை, வாட்டப்படும் இயற்கை, காணாமல் போகும் வாழைமரம், யானை, மோகம், காமம் என நமக்கும் புலப்படும், அவருக்கு மட்டுமே புலப்பட்ட பல பாடு பொருள்களை கண்டு உணர்ந்து, உருகி கவி பாடியிருக்கிறார்.

ஆனால் எதைப் பாடினாலும் அதுவாய் இருந்து, அதுவாய் வாழ்ந்து, அதுவாய் உணர்ந்து, அதுவாய் உணர்த்தி, அதுவாகவே ஆகி கவி படைத்திருக்கிறார். தொகுப்பின் கடைசி கவிதையில் சொல்வது போல...
சிறுவர் பூங்கா ஒன்று
எதிர்படுமென்கிறாய்
வண்ணத்துப் பூச்சியாகிறேன்” 


அவர் கவி வரிகளை சொல்லியே முடிக்க விரும்புகிறேன்.
தொலைந்துவிட்ட இதயத்திற்கு
வழிகேட்கும் படலமாய் நிகழலாம்
உன்னுடனான அடுத்த சந்திப்பு”


                        

# இந்தக் கவிதை நூலில் தொலைந்துவிட்ட இதயத்தை, உம் அடுத்த நூல் தான் மீட்கும். வாழ்த்துக்கள் !
 — with அரங்கன் தமிழ்.

சனி, 15 மார்ச், 2014

கப்பலை குஜராத்துக்கு திருப்பி விட்டார்...

(லெஃப்ட் டுடே இணைய இதழில், எனது கட்டுரை.)


கேப்டனின் கப்பல் எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்று தமிழக மக்களை சஸ்பென்ஸிலேயே கொண்டு சென்றது தான் விஜயகாந்தின் திறமை.

பாஜவா, திமுகவா, காங்கிரஸா எந்த பக்கம் சுக்கானை திருப்புவார் கேப்டன் என்று யாருக்கும் புரியவில்லை. ஒரு தேர்ந்த கதாசிரியரின் திரைக்கதை போல யாரலும் யூகிக்க முடியாத திருப்பங்களை கொடுத்து வந்தார்.

ஒரு வழியாக சிங்கப்பூரில் இருந்தே கப்பலை குஜராத்துக்கு திருப்பி விட்டார். இப்போது அங்கு ஏற்கனவே வரிசையில் நிற்கும் ஈழத் தோணி, மாம்பழப் படகு, எஸ்.ஆர்.எம் போட் ஆகியவற்றோடு கேப்டனின் கப்பலையும் பொருத்த முடியாமல் திணறுகிறது பா.ஜ.க.

நடிகரோடு மேடை ஏற மாட்டேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். நான் பிறந்த கள்ளக்குறிச்சியையும்,  பெரம்பலூரையும் தராவிட்டால் தனித்து போட்டி என்கிறார் வண்டலூர் மாநாட்டை நட்த்திக் கொடுத்த பச்சமுத்து.

கொங்கு கட்சி முறுக்கிக் கொண்டு இருக்கிறது. மதிமுக மாத்திரம் தான் தொந்தரவு செய்யாமல், யஷ்வந்த் சிங் வந்தாலும் விருந்து கொடுத்து மகிழ்ச்சி படுத்தி வருகிறார் வைகோ.

டாட்டாவோடும், ரிலையன்ஸோடும் ஒரே நேரத்தில் கூட்டணி அமைக்க முடிந்த தொழிற் வித்தகர் நரேந்திர மோடியால் தமிழக கூட்டணியை மாத்திரம் சீரமைக்க முடியாமல் ராஜ்நாத் சிங் தலையில் கட்டி விட்டார்.

பாவம் பொன்னாரும், இல.கனேசனும், முழி பிதுங்கி போயிருக்கிறார்கள். டெல்லி-சென்னை அனைத்து விமானங்களையும் ஏறி பார்த்து விட்டார்கள், மொபைல் பில்லும் எகிறி விட்டது, ஆனால் கூட்டணி தான்...


இப்போதைக்கு திமுக கூட்டணி தான் சீராக அமைந்திருக்கிறது. புதிதாக கூட்டணிக்கு வந்த புதிய தமிழகத்திற்கு ஒரு இடமும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அதற்கு கூட விமர்சனமும் உண்டு.

ஏற்கனவே கூட்டணியில் இருந்த முஸ்லீம் லீக்கிற்கு வேலூர் ஒதுக்கப்பட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது.

அந்த இயக்கத்தின் தொண்டர்கள் எதிர்ப்பை காட்டிய போது, பத்திரிக்கைகள் பிரதானப்படுத்தின. ஆனால் அதனை கலைஞர் பெரிது படுத்தாமல், அவர்களது உணர்வை மட்டும் ஏற்று இன்னொரு இடம் ஒதுக்கி விட்டார்.

திருவள்ளூர் ஒதுக்கப்பட்டது, நெருடல் நீங்கியது. ஊதி பெரிதாக்க நினைத்த உளவுத்துறையும், மற்றக் கட்சிகளும் தடுமாறிப் போனார்கள். திருமாவளவனின் கொள்கைக் கூட்டணி என்ற வாதம் உண்மையானது.



ஜெயலலிதா தான் எப்போதும் முதல், எதிலும் முதல். பலரும் இதை இதை தான் பாராட்டுவார்கள். குறிப்பாக அய்யா தா.பாண்டியன் புளகாங்கிதப் படுவார். ஏன், முதல் தமிழ் பிரதமர் என்று பட்டயமே கொடுத்தார்.

அவரும் இப்போது நிரூபித்துவிட்டார், முதல் தான் என்று. இடதுசாரித் தலைவர்களை டெல்லியில் இருந்து வரவழைத்து கூட்டணி அறிவிப்பு வெளியிட்ட முதல் தலைவர் ஜெயலலிதா தான்.

வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டவரும் ஜெயலலிதா தான். அதிலும் 40 தொகுதிக்கும் வெளியிட்டவரும் அவர் தான். தேவை என்றால், சிலரை வாபஸ் வாங்கி, கூட்டணிக்கு இடம் ஒதுக்குவேன் என்று சொன்னவரும் அவர் தான்.

தேர்தல் அறிக்கையை இந்தியாவிலேயே முதலில் வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர் ஜெயலலிதா தான். அதே போல தமிழகத்தில் முதன்முதலில் பிரச்சாரம் துவங்கிய தமிழக தலைவர் ஜெயலலிதா தான்.

இப்படி எதிலுமே முதல் ஆக இருந்து தா.பா மனம் கவர்ந்த ஜெயலலிதா இன்னொன்றிலும் முதலாவதாக திகழ்கிறார். கூட்டணிக் கட்சியை தயவு தாட்சண்யமின்றி வெளியேற்றியதில் தான்.

அதையும் அவர்களுக்கு சொல்லிய விதம் தான் நயம். ஊமைகாயமாக, அவர்களால் இரண்டு நாட்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து விட்டார்கள்.

அவர்கள் அலுவலகத்திற்கே சென்று, “இரண்டு நாட்களாக நீங்கள் எதுவும் சொல்லவில்லை. நண்பர்களாக இணைந்தோம், நண்பர்களாக பிரிவோம் என்று கலாய்த்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, கம்யூனிஸ்ட்டுகளுக்கு.

# வரலாறு முக்கியம் அமைச்சரே 

சனி, 8 மார்ச், 2014

பாகிஸ்தானியை கேப்டனின் துப்பாக்கி துளைத்தது....

ஓடி வந்த கேப்டன் எதிரில் இருந்த உயரமான சுவரை பார்த்தார். ஒரு நிமிடம் தான், இடது புறம் இருந்த சுவரில் இடது காலால் உதைத்து எம்பினார். அப்படியே தம் பிடித்து வலது காலால் வலது சுவற்றில் ஒரு உதை. காற்றிலே தாவினார். மேலிருந்து தொங்கிய கயிற்றை பிடித்தார். பிடித்த கயிற்றில் தொங்கிக் கொண்டே ஊஞ்சலாடினார். கட்.

பிளாஷ் பேக். சிங்கப்பூரில் முஸ்தஃபா மாலில் பர்சேஸில் இருக்கும் கேப்டனின் மொபைல் அலறுகிறது. எடுத்து எண்ணை பார்க்கிறார். பார்க்கும் போதே கண் சிவக்கிறது. காதில் வைக்கிறார். தலை மட்டும் அசைகிறது. எதிரில் இருப்பவருக்கு தெரியாது என்பதால், "ஊம் " என்கிறார். உடனே கிளம்புகிறார். ஏதோ தேசியப் பேரிடர் என மட்டும் புரிகிறது.

விமானத்தில் ஏறியவர் கடிகாரத்தை பார்த்தபடியே இருக்கிறார். பணிப்பெண் தண்ணீர் தருகிறார். சிந்தனையில் இருக்கும் கேப்டன் "எப்ப இறங்கும் ?" என்கிறார். "அளவைப் பொறுத்து" என்கிறார் பணிப்பெண். "நான் பிளைட்ட கேட்டன்" என்கிறார் கேப்டன். "நானும் அதான் சொன்னேன். போக வேண்டிய தூர அளவைப் பொறுத்து". "டெல்லி போகனும்"

                                

"இதோ. இப்போ". விமானம் இறங்கும் போதே கேப்டன் கதவை ஒரு கையால் இழுக்கிறார். திறக்கிறது. விமானத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்ல நிறுத்தியிருந்த குஜராத் "நானோ' காரில் குதிக்கிறார். காரின் மேற்புறம் இருந்த திறப்பு வழியாக, டிரைவர் சீட்டில் குதிக்கிறார். விமான நிலையத்தில் இருந்து சீறிப் பாய்ந்த கார் டெல்லியில் நுழைந்தது.

கேப்டன் கார் வேகத்தை பார்த்து டெல்லி டிராபிக் ஸ்தம்பித்தது. கேப்டனின் "வேகம்" தெரிந்த டிராபிக் போலீஸார், அனைத்து டிராபிக்கையும் குளோஸ் செய்து, கேப்டன் காரை மட்டும் விட்டனர். ஜன்பத் சாலை வழியாக கார் விரைந்தது. சாலை ஓரமாக, பைஜாமா ஜிப்பாவில் பாவமாக நின்று கொண்டிருந்த டிராஜடி காந்தியை பார்த்தார் கேப்டன்.

பாகெட்டில் இருந்த சிங்கப்பூர் சாக்லெட்டை எடுத்து சுண்டினார், நேராக போய் காந்தி வாயில் விழுந்தது. சிறு பிள்ளையாய் மகிழ்வுடன் கையாட்டினார் காந்தி. டாட்டா காட்டிய கேப்டன் காரின் வேகத்தை கூட்டினார். கார் செங்கோட்டையை நோக்கி பறந்தது. மொபைலை எடுத்து அழுத்தினார். "இன்னும் பத்து நிமிஷத்துல சென்னை வந்துருவேன். உங்கள பார்க்கறேன்" என்றவர் தனக்கு தானே சிரித்துக் கொண்டு "அக்காங்" என்றார்.

இப்போது அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த காரை பார்த்தார். தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன், "செங்கோட்டை எக்ஸ்பிரஸ்" என்று எழுதியிருந்தது. பழைய நினைவுகள் வந்தன. ஆளுக்கு கொஞ்சமாக பிரித்துக் கொண்ட பலா சுளையையும், வெவிச்ச கடலையையும் அடித்து பிடிங்கிய நினைவுகள்.

"இதான் சான்ஸ்" முணுமுணுத்தவர், ஸ்டியரிங்கை இடதுபுறம் முழுதும் திருப்பினார். எக்ஸ்பிரஸின் முன்புறத்தை நானோவின் பின்புறத்தால் லேசாக தட்டினார். நீண்ட தொலைவு பயணத்தில் களைத்திருந்த எக்ஸ்பிரஸ் ரோட்டை விட்டு விலகியது. சாலையின் இடதுபுறம் ஓடிய கங்கை ஆற்றில் எக்ஸ்பிரஸ் இறங்கியது. மெல்ல விசில் அடித்தார் "கடை வீதி கலகலக்கும்..."

செங்கோட்டையை கார் நெருங்கியது. ஓடும் காரில் இருந்து குதித்து ஓட ஆரம்பித்தார் கேப்டன். கட்...

ஊஞ்சலாடிய கயிற்றை பார்த்தார். கயிற்றில் தலைக்கு மேல் இந்திய தேசியக் கொடி. கொடி தரையில் விழாமல் அவசரமாக மேல்புறம் இழுத்தார். சுவற்றில் ஓங்கி உதைத்தார். சுவற்றின் மாடத்தில் நின்றுக் கொண்டிருந்த ராணுவ வீரனின் கையில் இருந்த துப்பாக்கி-ஐ பறித்தார். கொடிக் கயிற்றை துப்பாக்கியால் சுட்டு, கொடியை தரையில் வீழ்த்தியதாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானியை கேப்டனின் துப்பாக்கி துளைத்தது.

                             

எதிர் புறக் கயிற்றை இழுத்து கொடியோடு கோட்டைக்கு மேல் போனார். கோட்டையின் மேல் கொடிக் கம்பத்தின் கீழ் நின்றுக் கொண்டிருந்த தந்திர கோடியின் கண்கள் கலங்கியிருந்தன. "கேப்டன், நீங்க கொடிய மட்டும் காக்கல. என் மானத்தையும் தேச மானத்தையும் சேர்த்து தான்". "கலங்காதீங்க. இது என் கடமை" என்றார் கேப்டன். "கேப்டன் ஜிந்தாபாத்" கோஷம் விண்ணை பிளக்கிறது.

"அப்படியே சைனா பார்டர் போங்க கேப்டன். போன வாரம் டைப்பிங் மிஸ்டேக்கோட இருந்த பேச்ச ஒப்பிச்சிட்டேன். அதுல சைனா இந்தியாவின் ஒரு மாநிலம் அப்படின்னு நான் பேசிட்டேன். அதுக்கு எதிர்ப்பா பார்டர்ல மிலிட்டரிய குவிச்சிருக்காங்கலாம். ஒன் மேன் ஆர்மி நீங்க தான் காப்பத்தனும்". கண்கள் சிவக்க எதிரில் இருந்த மேஜையை ஓங்கி குத்தினார் கேப்டன்.

மேஜை மேலிருந்த கண்ணாடி கிளாஸ்கள் பறந்து ஸ்லோமோஷனில் தரையில் மோதுகின்றன. பொன்னார் உலுக்க கேப்டன் விழித்து பார்க்கிறார். டெல்லி குஜராத் பவன். "கேப்டன், அக்ரிமெண்ட்டுக்கு டெல்லி வந்ததிலிருந்து ஒடைஞ்ச கிளாஸுக்கு தேச்சே என் டெபிட் கார்ட் தேஞ்சிப் போச்சு" புலம்பிக் கொண்டே டெபிட் கார்டோடு எழுந்தார் இல.கணேசன். கேப்டன் லேசாக கண் அயர்ந்தார். பிண்ணனியில் பாடல்.

# அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே !

வெள்ளி, 7 மார்ச், 2014

கூட்டணிக் குழப்பங்கள் குறித்து, லெஃப்ட் டுடே இணைய இதழில் என் கட்டுரை....

எதையும் தாங்கும் இதயங்கள்

 
ஏ.பி.பரதன்  பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர். பொதுவாக தேசிய அளவில், எல்லோராலும் மதிக்கப்படுகிற தலைவர். ஆனால் அவரை, இப்படியும் கையாளமுடியும் என்று காட்டியவர் முதல்வர் ஜெயலலிதாதான்.
நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் தொடர்பாக, தன்னை சந்திக்க சென்னை வந்தவரை, சந்திக்காமல் இழுத்தடித்து, டெல்லி சென்று, அங்கு சந்திக்க நேரம் அளித்து, சென்னையில் இருந்து டெல்லிக்கு அவரை  அலைய வைத்தவர்.
அதே நிலைதான் இப்போதும். இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் காத்திருக்கிறார்கள், கூட்டணி அறிவிப்பிற்காக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெயலலிதா, கூட்டணி மக்களவைத் தேர்தலிலும் தொடர்வதாக அறிவிக்கிறார்கள்.
இந்திய கம்யயூனிஸ்ட் தலைவர்களை சந்திக்கிறார், கூட்டணியில் இருப்பதாக அறிவிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறார், நாற்பது தொகுதிக்கும். கூட்டணி கட்சிகளின் நிலை அந்தரத்தில்.
நிருபர்கள் கேட்டதற்கு ஜெயலலிதா சொல்கிறார்,"கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுக்கள் தொடர்கிறது. முடிவுற்றவுடன் அவர்களுக்கான தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள்." 
தா.பாண்டியன் சொல்கிறார், "அதிமுக வேட்பாளர் அறிவிப்பு... எங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு அல்ல"
இந்த நிகழ்வு இப்போது மட்டுமல்ல, 2011 சட்டமன்றத் தேர்தல் போதும் இதை விட மோசமான நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தனையையும் தாங்கிக் கொள்கிற,"எதையும் தாங்கும் இதயத்தோடு" இருக்கிறார்கள் பொதுவுடமைக் கட்சிகள். இந்தியாவிலேயே இந்த அனுபவம் தமிழகத்தில் மட்டும் தான் கிடைத்திருக்கும் கம்யயூனிஸ்ட்களுக்கு.
கம்யூனிஸ்ட்கள் மாத்திரமல்ல, சரத்குமாரின் 'சமத்துவ மக்கள் கட்சியும்', 'வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும்' காத்திருக்கிறார்கள், அம்மா மனம் இரங்குமா என.
திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் போது கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் கூட்டணியில் இணைந்துள்ளன.
திமுக மாநாட்டில், காங்கிரஸோடும் கூட்டணி இல்லை, பா.ஜ.க-வோடும் கூட்டணி இல்லை என்பதை திமுக தலைவர் கலைஞர் தெளிவாக அறிவித்துவிட்டார். 
தே.மு.தி.க மாத்திரம் திமுக கூட்டணியா, பா.ஜ.க கூட்டணியா, காங்கிரஸ் கூட்டணியா என்ற கண்ணாமூச்சி விளையாட்டில் இருக்கிறது. தே.மு.தி.க-வை கலைஞர் வலிய அழைத்த போது, எல்லோரும் ஏகடியம் செய்தார்கள். ஆனால் அவர் அழைப்பின் சூட்சுமம் இப்போதுதான் புரிகிறது.
திமுகவே அழைத்தவுடன், அதையே தனது மார்க்கெட்டிங் உத்தியாக்கிக் கொண்டார் விஜயகாந்த். உச்சாணிக் கொம்பில் ஏறியவர் இறங்க முடியாமல் தவிக்கிறார். ஒருபுறம் பா.ஜ.கவோடு பேசத் துவங்கினார், இன்னொரு புறம் காங்கிரஸோடு பேசத் துவங்கினார். இன்று வரை பேச்சு தொடர்கிறது, ஏலம் போடுவது போல. 
இப்போது திமுக கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார். பேரறிவாளன் மற்றும் மூவர் விடுதலை பிரச்சினைக்கு பிறகு, தே.மு.தி.க காங்கிரஸ் கூட்டணிக்கு போகமுடியாத நிலை. இப்போது பா.ஜ.க மட்டுமே ஒரே வழி.
பா.ஜ.கவுடைய நிலை அதற்கு மேல். தமிழருவி மணியனின் கனவுப்படி மெகா கூட்டணிக்காக படாதபாடு படுகிறது பா.ஜ.க. ம.தி.மு.க மாத்திரமே வெளிப்படையாக பா.ஜ.க கூட்டணி என்று அறிவித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியும் தே.மு.தி.க போல ஒளிந்து பிடிக்கும் விளையாட்டை தொடர்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி, பத்து தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணியை துவங்கிவிட்டது.  அந்த இடங்களே தனக்கு ஒதுக்க வேண்டுமென்பதும், தங்கள் சமுதாயக் கூட்டணிக்கும் நான்கு இடங்கள் வேண்டுமென்பதும் அவர்கள் நிலைப்பாடு. 
பா.ம.கவின் தளமான வட மாவட்டங்கள்தான், தே.மு.தி.கவிற்கும் வலுவான பகுதி. தே.மு.தி.கவின் உள்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தாலும், இடங்களை பகிர்வது ஒரு போராட்டமாகத்தான் அமையும். அப்புறம் பாரிவேந்தரின் ஐ.ஜே.கேவும், ஈஸ்வரனின் கொங்கு கட்சியும் கூட்டணியில் ஏற்கனவே இணைந்து காத்திருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைகள் எதுவுமே இல்லாத கட்சி காங்கிரஸ்தான். 
இந்த முறை ஈ,வி.கே.எஸ்.இளங்கோவன் விருப்பப்படி, நாற்பது தொகுதியிலும் காங்கிரஸே நிற்கக் கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
அதிலும் வியாழக்கிழமை ஒரு இஸ்லாமிய அமைப்பு ஞானதேசிகனை சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு மாரல்பூஸ்ட்டாக அமையும்.
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில், தமிழக தேர்தல் களம் சூடாகிக் கொண்டே போகிறது.  கூட்டணி குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே போவது போல ஒரு தோற்றம்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகள் தேர்தல் தேதி அறிவிப்பின் போது தெளிவாகிவிடும். காரணம், தி.மு.க எப்போதும் கூட்டணி கட்சிகளை மதித்து அரவணைத்து விடும். அ.தி.மு.கவோடு இருப்பவர்களுக்கு வேறு வழி கிடையாது, அவர்கள் அ.தி.மு.கவை மதித்து அரவணைத்துக் கொண்டாக வேண்டும்.
பா.ஜ.க நிலைதான் சிரமம். ம.தி.மு.கவை கூட சமாளித்துவிடலாம், வைகோ பல தேர்தல் களம் பார்த்தவர். பா.ம.கவுக்கு அறிவித்த தொகுதிகளை விடமுடியாது. 
ஆனால் கேப்டன் நிலைதான் பாவம். ஒரு மாதமாக கூட்டணிப் பிரச்சினையில் மீடியாக்களின் லைம்லைட்டில் இருந்தார் விஜயகாந்த். அவருக்கு, நேற்று ஒரு தே.மு.தி.க எம்.எல்.ஏவை தன்னை சந்திக்க வைத்து ஷாக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. தனது சினிமாக்களில் எளிதாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை சமாளிக்கிறவர், இந்த அரசியலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

written by சிவசங்கர் எஸ்.எஸ்.for LeftToday.in



( இப்போ கொஞ்சம் தெளிஞ்சிருக்கு, அதை அடுத்து பார்ப்போம் )

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

அதிமுக அலுவலகம் திணறல் - வெளி மாநிலத்தினர் குவிந்தனர்....

பண்ருட்டியார் இயக்கத்தில் இணைந்தார். எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியன் சந்தித்தார். எம்.எல்.ஏ கலையரசன் நன்றி சொன்னார். வெண்ணிற ஆடை நிர்மலா தலைமையை ஏற்றார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சியில் சேர்ந்தனர்.

                      

தமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. அடுத்து யார் என்ற பரபரப்பு கிளம்பி விட்டது. இவரா, அவரா என்று யாரை பார்த்தாலும் எல்லோருக்கும் சந்தேகம் சில கட்சிகளில். அலுவலகங்களுக்கு கூடுதல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்.

போயஸ் தோட்ட வாசலிலும், அதிமுக தலைமையகத்திலும், கோட்டையிலும் 24 மணி நேரமும் கேமராவுடன் ஊடக முற்றுகை. போயஸில் விடியற்காலை பால் ஊற்ற சென்ற பால்காரரை, யாரோ பிரமுகர் என கேமராக்கள் துரத்த, அவர் பயந்து ஓடிப் போனார். வீட்டு வேலைக்கு வந்த பெண் பணியாளரை துரத்த, அவர் அழவே ஆரம்பித்துவிட்டார்.

அதிகாரிகளை சந்திக்க, கோட்டைக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் வந்தால், "சார், அப்பாயிண்ட்மெண்ட் எப்போ ?" "தொகுதி வளர்ச்சியா ?" "நன்றி சொல்லவா ?" "இப்போ எந்தக் கட்சி ?" என்று நிருபர்கள் துரத்த ஆரம்பித்தனர். தலை தெறிக்க ஓடினர்.

இதெல்லாம் போதாது என்று இன்று அடுத்த அதிரடி திருப்பம். மகராஷ்டிரா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைய, இன்றைய ஆல் இண்டியா நியூஸ் இது தான். "என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்" இது தான் அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் பேனல் டிஸ்கஷன்.

                             

நாளை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, ஜார்கண்ட் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் "சூல்கணபதி" வருவதாக தகவல். ஜார்கண்ட் மாநிலவே தூக்கமிழந்து நிற்பதாக தொலைக்காட்சிகள் அலறுகின்றன. அசாம் மாநிலத்திலிருந்து அசாம் முற்போக்கு கழகத்தின் துணைத் தலைவர் "வர்க்கீஸ் ராமச்சந்திரன்" அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பது, அசாமின் தலைப்பு செய்தி.

" இந்தியாவின் எதிர்காலம் அம்மா தான்" என ராயலசீமாவின் இரண்டு ஆந்திரதேச கட்சியின் எம்.எல்.ஏக்கள் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதியில் தங்கதேர் இழுத்து கொண்டாடியுள்ளனர். அவர்கள் திருப்பதி லட்டுக்களோடு சென்னை நோக்கி நடைபயணமாக வந்து கொண்டுள்ளனர்.

"இந்திய சினிமாவின் நூற்றாண்டை எந்த மாநிலமும் கொண்டாட முன்வராத போது, கோடிகளை அள்ளி கொடுத்து, விழா நடத்தி இந்தியா சினிமாவின் உயிர்காத்தவர் அம்மா தான்" என்று கூறி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகியோர் நாளை மறுநாள் அதிமுகவில் இணைய உள்ளனர்.

கடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் மதுகோடா ஆகியோர் அதிமுகவின் வெப்சைட்டில் புதிதாக அளிக்கப்பட்டுள்ள "ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை" மூலம் அதிமுகவில் இணைய விண்ணப்பித்துள்ளனர்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஜெ-வை உதவியாளர் உலுக்கி எழுப்பினார்.

முதல்வர் கோபமாக "என்ன ?" என்றார். " தோட்டத்து கேட்டை ஏறிக் குதித்து, இரண்டு பேர் தூங்காம உங்கள பார்க்கனும்னு ஒக்காந்திருக்காங்கம்மா. பேர கேட்டா, பேசாம சைகை தான் காட்டுராங்க, கட்சியில சேரனுமாம்". "எப்படி இருக்காங்க ?"

"ஒருத்தரு தாடி வச்சிருக்காரு. பைஜாமா, ஜிப்பா போட்டிருக்காரு. டர்பன் கட்டியிருக்காரு. கையில மிக்சர் பாக்கெட் வச்சிக்கிட்டு சாப்பிட்டுகிட்டே இருக்காரும்மா"

"இன்னொருத்தரு ?"

"அவரு வேட்டி, சட்டைல இருக்காரும்மா. கழுத்துல சால்வையை மடிச்சி போட்டுருக்காரு. கண்ணாடி போட்டிருக்காரு. புஷ் குல்லா போட்டுருக்காரு. அப்பப்போ ரெண்டு விரல வச்சி மூக்க சுண்டுறாரும்மா"

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்

ஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆனால் தமிழகத்து மக்களுக்கு தான்...

ஆளுநர் உரை. வணக்கம் வைத்தவாறு உள்ளே நுழைந்தார் ஆளுநர். தமிழ்தாய் வாழ்த்து முடிந்து, நாற்காலியில் அமர்ந்த உடனேயே, உரையை படிக்க ஆரம்பித்தார். திமுகவின் சட்டமன்ற கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுந்து நின்றதை கவனிக்காதது போல வாசிப்பை தொடர்ந்தார்.

                                      

திமுக ஆட்சிக் காலத்தில் எதிர்கட்சியினர் எழுந்து நின்றால், அவர்களை பேச விட்டே, ஆளுநர் உரையை தொடரவார், இப்போது இப்படி. தாயைப் போல் பிள்ளையோ இல்லையோ, முதல்வரை போல் ஆளுநர். ஆளும் அரசின் தோல்விகளையும், தவறுகளையும் பட்டியலிட்டார் தளபதி அவர்கள்.

ஸ்டாலின்  அவர்களின் பேச்சு பத்திரிக்கையாளர்கள் காதில் விழாமல் தடுக்க, அதிமுகவினர் மேசையை தட்ட ஆரம்பித்தனர், ஓங்கி ஓங்கி. இதில் ஆளுநர் குரலும் கேட்கவில்லை. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் உரையை புறக்கணித்து, தளபதி அவர்கள் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தோம்.

--------------------------------------

(மறுநாள்)

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேச விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை அழைத்தார் சபாநாயகர். அம்மா புராணத்தோடு துவங்கியவர் புரட்சி என்பதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். "நித்தம் அம்மா செய்யும் புரட்சியின் வெளிப்பாடே இந்த ஆளுநர் உரை" என்றவர் ஆளுநர் உரையை தொடாமல் டைரக்டாக திமுகவை தாக்க ஆரம்பித்தார்.

"தாக்க வந்தால் காவல் நிலையம் போவது தானே, ஏன் பத்திரிக்கையாளரிடம் போக வேண்டும் ?" என்று ஆரம்பித்தவர், தொடர்ந்து கலைஞர் குறித்து தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். உடனே திமுக உறுப்பினர்கள் பொங்கி எழுந்தோம். ஜெ.அன்பழகன் முன்னேறி சபாநாயகர் அருகில் சென்று குரல் எழுப்பினார். கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் முன்புறம் வந்து விட்ட நிலை. 'ஆளுநர் உரை குறித்து பேசாமல், கலைஞர் குறித்து பேசுவதை அனுமதிக்க முடியாது' என்றோம். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க குரல் எழுப்பினோம். சபாநாயகர், "நான் அதனை படித்து பார்த்து முடிவு செய்கிறேன்"என்று சொன்னார். அவைமுன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து,"அவர் பேசுவதில் தவறு இல்லையே" என்று ஆரம்பிக்க, கொந்தளிப்பு அதிகமானது. சபாநாயகர் எழுந்து நின்று, "உங்கள் துணை தலைவர் விளக்கம் தரட்டும். எல்லோரும் இருக்கைக்கு செல்லுங்கள்"என சொன்னார்.

துணைத்தலைவர் அண்ணன் துரைமுருகன் அவார்களுக்கு மைக் இணைப்பு தரப்பட்டது. எல்லோரும் இருக்கைக்கு திரும்பினோம். ஆனால் ஜெ.அன்பழகன் சபைக்குறிப்பிலிருந்து மார்க்கண்டேயன் பேச்சை முதலில் நீக்குங்கள் என தொடர்ந்து வலியுறுத்த, சபாநாயகர் அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் அவரை வெளியேற்றினார்கள்.

துரைமுருகன்"இது ஆளுநர் உரை மீதான விவாதம். இதில் எங்கள் தலைவர் கலைஞர் குறித்தான விவாதத்திற்கு என்ன அவசியம் ? நாங்கள் இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால், உங்கள் ரத்தம் உறைந்து போகும்." என்றது தான் தாமதம்... அமைச்சர் முனுசாமி துள்ளி எழுந்தார். "அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். ரத்தம் உறைந்து போகும் என்பதை நீக்க வேண்டும்" என்று தாண்டவமாடினார். உடனே சபாநாயகரும் நீக்க உத்தரவிட்டார். "மார்க்கண்டேயன் பேசியதை நீக்காமல் இதை நீக்கக் கூடாது" எனக் குரல் எழுப்ப, முனுசாமி"அது உலகம் பூராவும் போன செய்தி" என்று ஆரம்பித்து பேசிக் கொண்டே இருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு ஆவேசமாக குரல் எழுப்பிக் கொண்டே சபாநாயகரிடம் சென்று வாதம் செய்தார். ஒவ்வொரு உறுப்பினராக அவையின் மையப் பகுதிக்கு சென்று எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்தோம். சபாநாயகர் "இருக்கைக்கு போங்க"என்று தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். "அவைக் குறிப்பிலிருந்து நீக்கு" என்று நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். நானும், லால்குடி சவுந்தரபாண்டியனும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டிருந்தோம். நான், எனக்கு வழங்கப்பட்டிருந்த ஆளுநர் உரையை கையில் வைத்திருந்தேன். அதனை சபாநாயகரிடம் காட்டி "இதில் இல்லாதவற்றை பேசுவதற்கு, இந்தப் புத்தகம் எதற்கு ?" என்று கேட்டேன். அவர் என்னை எச்சரித்தார். "தேவைப்படாத புத்தகம் எதற்கு ?" என்று சொல்லி கிழித்தேன். அவ்வளவு தான், சிக்ஸர் அடித்தால் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எழுவது போல், அதிமுகவினர் ஒரே நேரத்தில் எழுந்து நின்று என்னைப் பார்த்து குரல் எழுப்பினர். வழக்கம் போல் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமானார். கே.பி.முனுசாமி துடித்துப் போனார். சபாநாயகர் அப்போது தான் பார்த்தார்.

திமுக உறுப்பினர்கள் அனைவருமே மையப் பகுதியில் குவிந்திருந்தோம். அமைதியான கொறடா சக்கரபாணியே ஆவேசமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் நுழைந்து அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் மைதீன்கான் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். இன்னும் இருவர் அமர்ந்துவிட காவலர்கள் தவித்துப் போயினர். ஒரு வழியாக எல்லோரையும் வெளியேற்றினார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் சபாநாயகரை கண்டித்து கோஷம் போட்டவாறே வெளியே வந்தோம். சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அண்ணன் துரைமுருகன் பேட்டியளித்த பிறகு, காருக்கு காத்திருந்த என்னை பத்திரிக்கை போட்டோகிராபர்ஸ் சுற்றி வளைத்து போட்டோ எடுக்க, என்ன என்று விசாரித்தேன். "கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட்".

                     

மறுநாள் நாங்கள் திமுகவினர் சபையில் இல்லாத நேரம், ஆளுநர் உரையில் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டை ஜெயலலிதா அரசு பின்பற்றாததையும், இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்தும் தக்க ஆதாரங்களுடன் பேச, இடைமறித்த உணவு அமைச்சர் காமராஜ், "இதற்கும் ஆளுநர் உரைக்கும் என்ன சம்பந்தம் ? பேசக் கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.

"இதனை ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் பேசக் கூடாது என்றால், நேற்று மார்க்கண்டேயன் பேசியது ஆளுநர் உரை மீதானதா ?" எனக் கிடுக்கிப்பிடி போட அமைச்சர் திணறி போயுள்ளார். ஆளுக்கொரு நியாயம், அம்மா அரசாங்கத்தில்....

அன்று சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் அவைக்கு செல்லவில்லை. பத்திரிக்கையாளர்களை சந்தித்த தளபதி ஸ்டாலின் அவர்கள் ,"முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை பலமுறை கட்சியை விட்டு நீக்கி, பிறகு அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறவில்லையா? மீண்டும் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லையா? இதுபற்றி பேரவையில் பேச எங்களை அனுமதிப்பார்களா?

                           

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். செயல்பட முடியாதவராக உள்ளார் என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தது ஆதாரப்பூர்வமாக மக்கள் குரல் பத்திரிகையில் வந்ததே, இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

எம்.ஜி.ஆர். மறைந்த நேரத்தில் ஜானகி அம்மாள், மோரில் விஷம் கலந்து கொடுத்தார் என தி.நகரில் நடந்த கூட்டத்தில் இப்போதைய முதல்வர் பேசியுள்ளார். இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

சோபன்பாபுவோடு கோயிங்க் ஸ்டெடி குறித்து அவரே குமுதத்தில் எழுதினாரே. அதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?" என்று வினா எழுப்பி, "இதுபற்றியெல்லாம் பேச முயன்ற திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற செய்தது மட்டுமின்றி, எம்.எல்.ஏ. சிவசங்கரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எனவே, இதைக் கண்டித்து இந்தக் கூட்ட தொடர் முழுவதிலும் பங்கேற்பதில்லை" என அறிவித்தார்.

வெளியே நின்றிருந்த ஒரு அதிமுக எம்.எல்.ஏவின் கமெண்ட் "சபையில் பேச விட்டிருந்தா பதிவில் மட்டுமே இருக்கும், வெளியே அனுப்பியதால் உலகம் முழுதும் போவுது"