பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 ஏப்ரல், 2013

யாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் ?


மருதையாற்றில் புதிய நீர் தேக்கம் மக்கள் கருத்து -2...

குரும்பாபாளையத்தில் மக்களை சந்தித்துவிட்டு, அடுத்து கொட்டரை கிராமத்திற்கு சென்றோம்.

ஊருக்கு மத்தியில் ஆலமரத்தடியில் ஊர்மக்கள் கூடியிருந்தனர். கன அமைதி. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும்....

              

இங்கு தான் சில கூடுதல் தகவல்கள் கிடைத்தன. ஊரின் மூத்தவர் ஒருவர் பேசினார்.

" 1983-ல் முதன்முதலாக இந்த திட்டம் தீட்டப்பட்டது, அப்போது அரசு அதிகாரிகள் சர்வேக்கு வந்தார்கள். ஊரே கூடி எதிர்ப்பு தெரிவித்தோம். அத்தோடு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள் .

இப்போது சென்ற வருடம் ஒரு நாள் வந்து பார்த்தார்கள். எந்த சர்வேயும் செய்யவில்லை. மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டமும் நடத்தப்படவில்லை. எந்தப் பகுதியில் நீர்தேக்கம் வரப்போகிறது எனவும் தெரியப்படுத்தவில்லை.

யார் யாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் என்பதையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் மர்மமாகவே இருக்கிறது. 

தனியார் திட்டங்களுக்கே விளக்கக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். அரசு திட்டத்தை மூடுமந்திரமாக சட்டசபையில் அறிவிப்பது ஏன் ?

அதையும் எந்த கிராமங்களுக்கு பயன் என்று அறிவித்தார்கள். ஆனால் எந்த கிராமங்கள் பாதிக்கப்பட போகிறது என்பதை சொல்லவில்லை.

எடுக்கப்பட போகிற இடத்திற்கு, மாற்று இடம் தருவார்களா ?
 பணம் கொடுத்தால் என்ன செய்வது ? 
வேறு எங்கே போவது ? ஒன்றும் புரியவில்லை. 
எங்கள் எதிகாலம் என்ன ? "

 பதில் யாருக்கும் தெரியவில்லை......

                               

90 வயது மூதாட்டி முதல், 12 வயது பள்ளி மாணவி வரை மைக் பிடித்து பேசினார்கள். சிலர் அழுத போது என்ன சமாதானம் சொல்வது என தெரியவில்லை. ஒவ்வொருவர் பேசியதும் தனித்தனி சோகக் கதை.

( தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக