பிரபலமான இடுகைகள்

பாசறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

தி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 2

கந்தர்வகோட்டையை கடக்கும் போது 20 நிமிடத்தில் புதுகையை அடைந்து விடுவோம் என்றார்கள். அப்போது தான் நினைவு வந்தது தலைப்பு, "காலத்தால் மாறி வரும் களப்பணிகள்". அய்யா சுப.வீ அவர்களுக்கு முன்பாக என் டர்ன், பேசுவதற்கு என்று சொல்லியிருந்தார்கள். எப்போதும் கடைசியாக பேசுவதில் ஒரு சிக்கல், எல்லா சப்ஜெக்ட்டும் பேசி முடிக்கப்பட்டிருக்கும். மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் மாட்டி நிறைய அனுபவம்.

எந்த தலைப்பில் பேசுகிறீர்கள் என்று கேட்கும் போதே தமிழ்ராஜாவிடம் சொன்னேன், தலைப்பில் பேசி பழக்கம் இல்லை என. ஆனாலும் விடவில்லை. சரி கொடுங்கள், கலந்துக் கட்டி சமாளிக்கிறேன் என்று சொல்லி விட்டேன். தலைப்பையும் அப்து அண்ணனையே கொடுக்க சொன்னேன். தலைப்பை பார்த்து குஷியான அபி அப்பா (எ)தொல்ஸ் அண்ணன் "சார் சூப்பர் தலைப்பு" என்றார். "சூப்பர் தான் அண்ணா, தயார் பண்ணதான் நேரம் இல்லை. மக்கள் சந்திப்பு, திருமணம் என பல நிகழ்வுகள் குறுக்கே" என்றேன்.

"நீங்க கவலையேப் படாதீங்க. நான் மெயில் அனுப்பறத வச்சி தயார் பண்ணுங்க"ன்னார். அனுப்பினார். இரண்டு நாளில் போன் அழைப்பு. சரவணக்குமார் "சார், அபிஅப்பா சொன்னார். மெயில் அனுப்பியிருக்கேன்". இப்போ தான் அது ஞாபகம் வந்தது. Ipad ஐ எடுத்து மெயிலை துருவினேன். திராவிட இயக்க ஆரம்ப காலத்தில் நடத்தப்பட்ட பத்திரிக்கைகளின் பட்டியல். காலேஜ்ல எக்ஸாம் ஹாலுக்குள் நுழையும் போது புத்தகத்த ரொம்ப அவசரமா புரட்டுவோமே அது போல, எல்லா பத்திரிக்கை பேரையும் சொல்லி பார்த்தேன், மேடையில் இருக்கும் பேராசிரியரை நினைத்து.

முழுவதும் சொல்லி பார்ப்பதற்குள், புதுகையில் நுழைந்து விட்டோம். பாசறை நிகழ்விடத்தை அடைந்த போது ஒரு ஜீன்ஸ்-டிசர்ட் இளைஞர் பைக் மீது அமர்ந்து அலைபேசிக் கொண்டிருந்தார், அட நம்ம பேச்சாளர் அண்ணன் ஒப்பிலாமணி. சேட்டு இளைஞர் போல ஒருவர் வரவேற்றார், கிருஷ்ணகிரி சாய்குமார். எங்கள் மாவட்டத்தை சேர்ந்த இணைய வீரர்கள் ஷாஜஹான், இளஞ்செழியன், அரங்கன்.தமிழ், எஸ்.பி.மகேந்திரன். தமிழ்ராஜா ஒரு இளைஞர் படையோடு. காலேஜ் ஃபீலிங்.

அரங்கில், எங்கு நோக்கினும் நீல ஜீன்ஸ், மாவட்டக் கழகத்தால் வழங்கப்பட்ட டி-சர்ட் அணிந்த தோழர்கள். மேடையிலும் இளமையாய் அதே உடையில் பெரியண்ணன் அரசு, அப்துல்லா, ஐ.பி.செந்தில்குமார், ஜெரால்ட். அண்ணன் கோவி.லெனின் ஜீன்ஸும் கலர் சட்டையுமாக. அய்யா சுப.வீ வழக்கம் போல் கருஞ்சட்டை வீரராக. டி.ஆர்.பி ராஜாவும் வழக்கம் போல் பேண்ட்,சர்ட். காரணம் அப்புறம் தான் தெரிந்தது, அவர் உயரத்திற்க்கு டி-சர்ட் இல்லையாம். நான் பேண்ட் எடுத்துகிட்டு வந்திருந்தா டி-சர்ட் போட்டிருக்கலாம்...



மதுரை வைரமுத்து, திருப்பூர் கார்த்தி ஆகியோரின் பேச்சையும், டிஜிட்டல் சேகரின் கழகப் பாடலையும் கேட்க முடியவில்லை, தாமதத்தால். ஜெரால்ட் பேச ஆரம்பித்திருந்தார். புள்ளி விபரங்களோடு பாயிண்ட் பை பாயிண்டாக ஜெ அரசின் தவறுகளை அடுக்கினார். தென்றலாக இருந்தாலும் சற்று சூடாக. மாணவரணி பணியையும், அவர்ளை இணையத்தில் ஒருங்கிணைப்பதையும் விளக்கினார். இன்று தான் ஜெரால்ட் இவ்வளவு நேரம் பேசுவார் என்பதனை அறிந்தேன். அதே போலத் தான் ஐ.பி.செந்தில் குறித்தும், டி.ஆர்.பி. ராஜா குறித்தும்.

ஐ.பி.செந்தில்குமார் பேச அழைக்கப்பட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் தலைமைசெயலகத்தில் பார்த்திருக்கிறேன், ஒரு இளைஞர் படையோடு உலவிக் கொண்டிருப்பார். மாநில இளைஞரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தளபதி நிகழ்ச்சிகளில் தயக்கம் நிறைந்த அடக்கத்தோடு கலந்து கொள்வதையும் பார்த்திருக்கிறேன். அனால் இன்று அவரது விஸ்வரூபத்தை பார்த்தேன். தேர்ந்த தயாரிப்பாக இருந்தது பேச்சு.. அதிலும் அவர் குறிப்பிட்டதை போல் நான்கு நாட்கள் தயாரித்து வந்ததை பேச இயலாமல் மற்றவற்றை பேசியதே இப்படி. திராவிட இயக்கத்தின் அவசியத்தையும், சமூக நீதியையும் குறித்து உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்.




அடுத்து டி.ஆர்.பி.ராஜா. கல்லூரி பேராசிரியர் போல் பவர்பாயிண்ட் பிரசண்டேஷனோடு அருமையான வகுப்பாக அமைந்தது. சமூக வலைதளங்களில் எவை எவை எப்படி. கூகுள் பிளஸ்ஸில் கூட்டம் இல்லை. ஃபேஸ்புக்கை போல் டிவிட்டரிலும் கவனம் செலுத்துங்கள், இப்படியாக டிப்ஸ். பதிவுகள் எப்படி போடலாம் என நகைச்சுவையோடு அவர் ஸ்டைலில் பேசினார். கேப்'டன்ஜி', அம்மா ஆகிய சொற்களுக்கு அவர் பயன்படுத்திய மாடுலேஷனுக்கு கிளாப்ஸ் அள்ளியது.



அவரும் ஒரு மணி நேரம் பேசினார். இவரும் ஒரு மணி நேரம் பேசினார். ராஜாவைப் பார்த்துக் கேட்டேன், "ராஜா, உங்களுக்கே தெரியுமா இது வரை, ஒரு மணி நேரம் பேசுவீர்கள் அப்படின்னு" "அண்ணே, ஆமாண்ணே இன்னைக்கு தான் தெரியுது" என சொல்ல மேடையில் சிரிப்பு. இரண்டு பேருமே அருமையான பேச்சு.

அடுத்து நான் தான். "ஐ.பி.எஸ் பேச்சு முறுக்கேற்றுவது போல இருந்தது. கலைஞர் வசனத்தில் பராசக்தி படத்து சிவாஜி போல உணர்ச்சிகரமாக இருந்தது. டி.ஆர்.பி பேச்சு இன்னைய டிரெண்டுக்கு லைட்டர் வெயின்ல நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஸ்டைல்ல இருந்தது. நான் தான் மாட்டிக்கிட்டேன்...."

ஆனால் அவரை நினைத்து தைரியமாக பேசினேன்...
 

புதன், 4 செப்டம்பர், 2013

அடிச்சும் சாப்பிட சொல்வாங்க...

தஞ்சை புறவழிச்சாலையில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பும் போதே நண்பகல் 2.00. காலையில் பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு திருமணங்களில் அண்ணன் ஆ.ராசா அவர்களோடு கலந்து கொண்டதால், காலை பாசறை வகுப்புகளை கட் அடிக்க மாவட்ட செயலாளர் அண்ணன் அரசு அவர்களிடம் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தேன். உணவுக்கு நிறுத்தினால் தாமதமாகிவிடும் என்று யோசித்து, புதுக்கோட்டையில் பார்த்துக் கொள்ளலாம் என விரைந்தோம். 



பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட எங்கள் மாவட்டத்து நண்பர்கள் மதிய உணவு முடித்து வகுப்புக்கு திரும்பி விட்டோம் என தெரிவித்தனர். "பிரியாணி சாப்பிட்டோம், புதுக்கோட்டை மாவட்டமே இருந்து உபசரித்தார்" என்றனர். அண்ணன் பெரியண்ணன்.அரசு எப்போதுமே அப்படிதான். அன்பில் திக்குமுக்காட செய்வார். ஹோட்டலில் சாப்பிட்டால் கூட, அருகில் இருப்பவரை உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்.

பெண்ணாகரம் இடைத்தேர்தல் போது, நாங்கள் அருகில் இருந்த ஊர்களில் தேர்தல் பணியாற்றினோம். ஒரு நாள் எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார். ஊர்வன, பறப்பன அத்தனை ஐட்டங்களாலும் நிரம்பியிருந்தது இலை. அவரே நின்று பரிமாறுவதை கண்காணித்து கொண்டிருந்தார். "சிவசங்கருக்கு இன்னொரு மீன் வை, இது காலையில் எங்கள் மாவட்டத்திலிருந்தே ஸ்பெஷலா கொண்டு வந்தது. ருசியா இருக்கும் சாப்பிடுங்க".

300 கி.மீக்கு அப்பாலே அப்படி கவனிச்சுக்கிடவர், சொந்த ஊர்ல எப்படின்னு சொல்லவா வேண்டும். அவரது அன்பில் அனைவருமே அசந்து போயிருந்தனர். போறாததுக்கு அவரோடவே ரெண்டு பேரு அப்துல்லாவும், தமிழ்ராஜாவும். அவர் கண்ணசைவில் செயல்படுபவர்கள். அடிச்சும் சாப்பிட சொல்வாங்க.

அப்துல்லா அண்ணே, "என்னண்ணே" அப்படிங்கும் போதே மயக்கிடுவார். சிரிப்பு ஆன் மோட்லேயே இருக்கும். அவர் ஸ்பெஷாலிட்டியே யார பாத்தாலும் "அண்ணே"ன்னு கூப்பிட்டு, அவங்களுக்கு இவரப் பார்த்தாலே "அப்துல்லாண்ணே" அப்படின்னு தான் ஞாபகம் வரும். 
அப்புறம் இன்னொரு விஷயம், எந்த ஊரா இருந்தாலும் நம்ம ஊர்னே சொல்லுவாரு. அந்த அளவுக்கு உலகம் சுற்றும் வாலிபன்.


தமிழ்ராஜா, இவரு தான் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர்களில் இளையவரா இருப்பாரு. புன்னகை மன்னன். எத கேட்டாலும் சிரிச்சிக்கிட்டு தான் பதில் சொல்வார். கோபப்பட்டாலும் சிரிச்சிக்கிட்டு தான் கோபப்படுவாரான்னு வீட்ல கேக்கனும். கழகப் பணிகளில் கில்லி. 

அரசு அண்ணனும், அப்துல்லாவும், தமிழும் பேண்ட், ஷர்டில் போனால் கல்லூரி பி.ஜி ஸ்டூடண்ட்ஸ் மாதிரி தான் இருப்பாங்க. இப்படி இளைஞர்களால் நிரம்பிய மாவட்டக் கழகம். அதனால் தான் இளைய சிந்தனையோடு இணைய பயிற்சிப் பாசறையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலை நிகழ்வே களை கட்டியதை சொன்னார்கள், அலைபேசியில் அழைத்த தோழர்கள். தமிழ்ராஜா வரவேற்புரையாற்ற, அரசு அண்ணன் தலைமையுரையாற்ற நிகழ்வு துவங்கியிருக்கிறது. இணையத்தில் கழக வரலாறு என்ற தலைப்பில் அப்துல்லா பேசியிருக்கிறார், அருமையாக. பொருத்தமானவர், பிளாக்கில் கழகத்திற்காக வாதிட்ட முதல் நான்கைந்து பேரில் ஒருவர்.

"நவீன ஊடகங்களில் திராவிட இயக்கம்" என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் அண்ணன் கோவி.லெனின் பேச்சு அனைவரையும் வசப்படுத்திவிட்டது. திராவிட உணர்வு கொண்ட பத்திரிக்கையாளர் என்பதை தாண்டி, இன்றும் திராவிடம் குறித்து எழுதுவதற்கு இருக்கின்ற எழுத்தாளர். “இணையமும் கழகமும்” என்ற தலைப்பில் கொக்கரக்கோ சௌமியன் பேசியிருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர் ஆயிற்றே, பேச்சும் அப்படியே இருந்திருக்கிறது.

கந்தர்வக்கோட்டையை தாண்டும் போதே, மாலை நிகழ்வு துவங்கியது என செய்தி....