பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 24 மார்ச், 2015

சிங்கம் நீ, சிங்கப்பூரே நீ !

தமிழகத்திலேயே அதிகம் குடிசை வீடுகள் உள்ள மாவட்டங்கள் எங்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள். இது கடந்த தலைவர் கலைஞர் ஆட்சியின் போது குடிசை வீடுகளுக்கு மாற்றாக “கான்கிரீட் வீடுகள்” கட்டித் தருவற்காக “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” கொண்டு வந்த போது, திரட்டப்பட்ட புள்ளிவிபரத்தால் அறிந்தது.

இதில் செந்துறை, வேப்பூர், ஆண்டிமடம் ஒன்றியங்கள் சற்று கூடுதல். இந்த குடிசை வீடுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், கான்கிரீட் வீடுகளாக மாறியதற்கு காரணமானவர் லீ குவான் யூ. வீடுகள் மட்டும் உயரவில்லை. அவர்கள் வாழ்வாதாரமே உயர்ந்திருக்கிறது. அவரை நான் வணங்குகிறேன்.

             

ஆம் மறைந்த சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூ தான். அவர் வெறும் பிரதமர் மாத்திரமல்ல சிங்கப்பூரை நிர்மாணித்த சிற்பி. தனி ஒரு மனிதனாய் அந்த தேசத்தையே நிர்மாணித்தவன்.

ஒரு சுண்டைக்காய் அளவிலான தீவை, உலக பொருளாதார வரைபடத்தில் இடம் பெற செய்தது அவரது கடுமையான உழைப்பு தான். அந்த பொருளாதார வளர்ச்சிக் காரணமாக, அங்கு வேலைவாய்ப்பு பெருக, தமிழகத்தில் இருந்து நம் மக்கள் பயணப்பட்டார்கள், பயன்பட்டார்கள்.

இது பொருளாதார வளர்ச்சிக்கு பிறகு. ஆனால் அதற்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். சீனர்கள், மலாய் மக்கள், தமிழர்கள் என்று பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந்தது சிங்கப்பூர். ஆனால் அனைவரையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூரை முன்னேற்றினார் லீ.

பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த நேரத்தில் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்தவர், அப்போதே பிரதமரானார். இடையில் சிறிது காலம் சிங்கப்பூர் மலேசியாவோடு இணைந்திருந்தது. பிறகு பேதம் ஏற்பட்டு பிரிய நேர்ந்தது. பிரியாமல் இருக்க வேண்டுமென லீ விரும்பினார்.

காரணம் சின்னத் தீவான சிங்கப்பூர் குடிக்கிற தண்ணீர் முதற்கொண்டு அனைத்திற்கும் மலேசியாவை நம்பித் தான் இருக்க வேண்டும். அதனால் அந்த நாட்டோடே இணைந்திருந்தால், மக்கள் வளம் பெறுவார்கள் என்பது அவர் எண்ணம். ஆனால் பிரிந்து விட்டது. அதனால் ஓய்ந்துவிட வில்லை அவர்.

சிங்கப்பூரை பொருளாதார வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வேண்டுமென உறுதி பூண்டார். செய்துகாட்டி விட்டார். பல்வேறு நாடுகளுக்கு வணிக மையப் புள்ளியாக திகழ்கிறது. இன்னும் பல காலத்திற்கு திகழும், அவர் போட்டு கொடுத்திருக்கிற அஸ்திவாரத்தின் மேல்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழு முதற் காரணமாக இருந்ததாக, இவருக்கு ஒப்பாக, வேறு எந்த நாட்டுத் தலைவரையும் காட்ட முடியாது.

அந்த நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாமல், தமிழகத்தை போல் பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு சென்று பணியாற்றுவோர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அவரே காரணம், அதன் மூலம் அந்த நாடுகளின் வருமானத்திற்கும் அவரே காரணம்.

சர்வாதிகாரம் சில நேரங்களில் தலைதூக்கியது என்றக் குற்றச்சாட்டு இருந்தாலும், அதுவும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கான அவரது செயல்பாடாகவே அமைந்தது. ஒரு தலைவனாக, இப்படி தான் இருக்க வேண்டுமென ரோல்மாடலாக வாழ்ந்துக் காட்டி விட்டார்.

இதை எல்லாம் தாண்டி அவர் மீது கூடுதல் அபிமானம் ஏற்படுவதற்கு காரணம், தமிழுக்கு அவர் கொடுத்த மரியாதை. தமிழை ஆட்சி மொழியாக்கினார். சிங்கப்பூர் பணத்தில் இடம் பெற்றிருக்கும் நான்கு மொழிகளில் தமிழும் ஒன்று.

தமிழகத்தில் இருந்து சென்ற தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரை வாஞ்சையோடு வரவேற்றவர், அன்பு பாராட்டியவர்.

அவர் மறைந்து விடவில்லை. சிங்கப்பூர் நாட்டினரின், அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரின் ஒவ்வொருவரது வீட்டிலும் எரிகிற அடுப்புத் தீயாக, “அணையா தீபமாக” அவர் என்றும் இருப்பார்.

சிங்கப்பூரில் ஓங்கி உயர்ந்து நிற்கிற கட்டிடங்களில் அவர் மூச்சுக் காற்று உலவிக் கொண்டிக்கும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட நீர்நிலைகளில் அவரது உதிரம் கலந்திருக்கும். நாட்டின் உள்கட்டமைப்பில் அவரது உடல் மறைந்திருக்கும். புழங்கும் நாணயங்களில் அவரே நிறைந்திருப்பார்.

# சிங்கம் நீ, சிங்கப்பூரே நீ !


                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக