பிரபலமான இடுகைகள்

மு.க.ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.க.ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அன்பான தளபதி

நேற்றிரவு மணி 10.45 அலைபேசி அழைத்தது. அய்யா துரைமுருகன் அவர்களது எண். "மாவட்ட ஷெயலாளரா?". " ஆமாங்கய்யா". "தளபதி பேசுறாங்கப்பா". அலைபேசி கைமாறியது.

"சங்கர், எங்க இருக்கீங்க?", தளபதி அவர்கள் தான். "அரியலூர்ல இருக்கன் அண்ணா". "அப்பா ஊர்ல இருக்காங்களா?". "இருக்காங்க அண்ணா". "கும்பகோணம் வர்றேன் காலையில. அப்பாவ பார்க்க வர்றேன்". "சரிங்க அண்ணா".

அய்யா கோ.சி.மணி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு கும்பகோணம் வந்துவிட்டு சென்னை செல்லும் போதும் அப்பாவை சந்திக்க முயற்சித்தார். அப்போது அப்பா ஹைதராபாத் செக்கப் சென்றிருந்தார்கள்.

அடுத்து செந்துறை அருகே, கொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு ஆறுதல் கூற வந்த போதும், கும்பகோணத்தில் சொன்னார், " சங்கர், ஆண்டிமடம் போய் அப்பாவ பார்த்திடலாம்". "அப்பா திருச்சி அப்போலோவுல இருக்காங்க அண்ணா".

திருச்சியிலும் அப்பாவை பார்க்க முயற்சித்தார். அண்ணன் நேரு இல்ல திருமண நேர நெருக்கடியில் சந்திக்க இயலவில்லை. இப்போது கும்பகோணம் பயணம் என்றவுடன் உடனே திட்டமிட்டு விட்டார், அப்பாவை சந்திக்க.

காலை உளுந்தூர்பேட்டை சென்றேன். ச.ம.உ அண்ணன் உதயசூரியன், மா.செ அங்கயற்கண்ணி ஆகியோரோடு வரவேற்பு கொடுத்தோம். தளபதி அவர்களது வாகனத்தில் அண்ணன் கு.க.செல்வம் அவர்களோடு, அண்ணன் உதயசூரியனும் நானும் பயணித்தோம்.

விருத்தாசலத்தில் வரவேற்பு கொடுத்த மா.செயலாளர் கணேசன், ச.ம.உ உடன் இணைந்தார். ஆண்டிமடம் பயணித்தோம். வழியெங்கும் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு நிகழ்ச்சிகள்.

ஆண்டிமடம். வீட்டு வாயிலில் கழகத் தோழர்கள் குவிந்திருந்து வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

கடந்த நான்கு மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்ததால் அப்பா மெலிந்து விட்டார்கள். களைப்பாகவும் இருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,"நீங்க உக்காருங்கண்ணா" என்றார்.

"எப்படி இருக்கீங்கண்ணே?". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள். "தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க", என்றார் என் அம்மா. "தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்", என்றேன்.

உடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே," சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.

அப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. "அம்மா, அப்பாவ பார்க்கும் போது", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம்.

படத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, " தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.

அப்பாவின் சிகிச்சை நிலை, உணவு ஆகியவற்றை குறித்து விசாரித்தார்கள் தளபதி அவர்கள். உடனே அப்பா ,"கிளம்பலாமா?" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. "எங்கப்பா?" என என் தம்பி சிவக்குமார் கேட்க, "கூட்டத்துக்கு தான்" என்றார்கள் அப்பா. 

"மாலையில் தான்ணா கூட்டம். வெயிலா இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு  மாலை
வாங்க. நான் முன்னாடி கும்பகோணம் கிளம்புறேன்" என்றார்கள் தளபதி.

அப்பா கண்ணீர்  பெருக்கோடு விடைகொடுக்க, "ஏன்ணா இதுக்கா நான் வந்தேன். நீங்க சந்தோஷமா, தெம்பா இருக்கணும் தானே பார்க்க வந்தேன். நல்லா இருப்பீங்க" என கையை பிடித்து சொல்ல, அப்பாவுக்கு ஆறுதல். இது மிகுந்த தெம்பை தரும்.

1989ல் அப்பா எஸ்.சிவசுப்ரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். பொது நிறுவனங்கள் குழுத் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர். குழுவின் உறுப்பினர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது, தளபதி அவர்களை அழைத்து வந்து, கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அப்பா. அப்படி நீண்ட கால உறவு இது.

கார் கிளம்பியது. முகநூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நினைவை காட்டியது. அப்பா ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை வந்த போது, தளபதி அவர்கள் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்த நாள் இன்றாம்.

"மணியண்ணன் வீடு மயிலாடுதுறை வழியில தானே சங்கர். கும்பகோணம் போனா அவர் தான் முன்னாடி நின்னு வரவேற்பார்", என்று மறைந்த அய்யா கோ.சி.மணி நினைவில் மூழ்கினார் தளபதி.

போகின்ற வழியெங்கும் இருக்கும் கழகத்திற்கு உழைத்த முன்னோடிகளை நினைவில் கொண்டு, அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கும் தளபதி அவர்களின் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. மறைந்த முன்னோடிகளையும் நன்றியோடு நினைவு கூறும் பண்பு இளைய தலைமுறைக்கு பாடம்.

# அன்பான, பண்பான, பாசத் தளபதி வழிகாட்டுகிறார் !

சனி, 1 ஏப்ரல், 2017

தளபதி வாழ்த்திய செம்பருத்தி !

தளபதி அவர்களது பிறந்தநாள் அன்று சால்வைக்கு பதில் நூல்களாக வழங்கச் சொன்னதில் நூல்கள் குவிந்தன. அவற்றை பிரித்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள் தளபதி அவர்கள்.

அதனைக் கண்ட மாணவி செம்பருத்தி தளபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார் "தங்களது கிராம நூலகத்திற்கும் நூல்கள் தருமாறு ". நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்திற்கு நேரிடையாக சென்று நூல்களை அளித்தார் தளபதி. இன்று மீதி நூல்களை பத்துக்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு வழங்கினார்.

செம்பருத்தியின் கோரிக்கையை ஏற்று  தளபதி அவர்கள் நூல்களை வழங்க உறுதி அளித்தார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரிடமும் நூல்களை நேரடியாக வழங்கினார்.

கொளப்பாடியில் இருந்து காலை கிளம்பி அறிவாலயம் வந்தடைந்தார் செம்பருத்தி. தளபதி அவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும், பரபரப்பிலும் இருந்தார். தளபதி அவர்களை சந்திக்கும் முன் " சார், என்ன கேட்பாங்க?" என்றார். "ஒண்ணும் கேக்க மாட்டாங்க. அப்படி கேட்டாக்க பதட்டமில்லாம பதில் சொல்லும்மா" என்றேன். ஆனால் அப்படி கேட்டாரே தவிர, அவர் தயாராகத் தான் இருந்தார் என்பது பிறகு தான் தெரிந்தது.

தளபதி அவர்களது அறையில் நுழைந்தோம். தளபதியை வணங்கினார் செம்பருத்தி. அருகில் அழைத்து நிறுத்தினார் தளபதி. செம்பருத்தி உடன் அவரது அண்ணனும், சித்தியும் வந்திருந்தனர். "சங்கர் வாங்க", என்றழைத்து என்னையும் உடன் நிறுத்தினார். தளபதி அவர்களது மேசை புத்தகங்களால் நிறைந்திருந்தது.

" செம்பருத்தியா?" என்றார். ஆமாம் என்று தலையசைத்தார் செம்பருத்தி. "எந்த ஊர்?", என்றுக் கேட்டார் தளபதி. தளபதியை பார்த்த பிரமிப்பில் நின்றுக் கொண்டிருந்த செம்பருத்தி, " கொளப்பாடி", என்றார். "குன்னம் தொகுதி", என்றேன். " என்ன நூலகம்?", என்றுக் கேட்டார். "ஊர்புற நூலகம். செம்பருத்தியால் கட்டிட வசதி கிடைத்தது. நூல்கள் அன்பளிப்பாக செம்பருத்தியால் சேர்ந்தது", என்றேன்.

"நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் இருக்கிறது?" என்றுக் கேட்டார். "687 புத்தகங்கள் இருக்கிறது", என்று துல்லியமாக பதிலளித்தார் செம்பருத்தி. "இதில் 200 புத்தகங்கள் இருக்கிறது. உங்கள் நூலகத்தில் கொடுத்திடுங்க. வாழ்த்துக்கள்", என்றார் தளபதி. மகிழ்ச்சியாகத் தலையசைத்தார் செம்பருத்தி. வணங்கி விடைப் பெற்றார்கள் செம்பருத்தி குடும்பத்தினர்.

வெளியில் வந்தும் படபடப்பு அடங்கவில்லை செம்பருத்திக்கு. "சார், அந்த போட்டோ கிடைக்குமா?", என்றுக் கேட்டார் செம்பருத்தி. "அவசியம் வாங்கிக் கொடுத்துடறேம்மா", என்றேன். அதற்குள் அவரை தந்தி டிவியினர் பேட்டிக்கு அழைத்தனர். தயங்கினார்.  "மனசுல பட்டதை பேசும்மா", என்றேன். எளிமையாக பேசினார்.

கீரனூர் நூலகத்திற்கு நூல்கள் பெற வந்த கீரை தமிழ்ராஜா செம்பருத்தியை கண்டு உற்சாகமானார். " அண்ணனால உலகம் பூரா தெரிஞ்சுட்ட, வாழ்த்துக்கள்", என்றார். "அது செம்பருத்தி படிப்பு ஆர்வத்திற்கு கிடைத்த பாராட்டு" என்று ராஜாவிற்கு பதிலளித்தேன்.

செம்பருத்தியை நோக்கி ,"சொன்ன மாதிரி ஐ.பி.எஸ் படிக்க முயற்சி எடுக்கணும். இன்னும் புகழ் பெற வேண்டும் ", என்று வாழ்த்தினேன். " சார், நல்லா படிக்க சொல்லுங்க", என்று சிரித்தவாறு புகார் சொன்னார் செம்பருத்தியின் அண்ணன். "சார், இப்போ பிளஸ் ஒன் தான் . இந்த வருஷம் நல்லா படிச்சி மார்க் வாங்கிடுவேன்" என்று உறுதியளித்தார் செம்பருத்தி.

கொளப்பாடி போய் சேர்த்து அலைபேசினார். "சார், கலைஞர் டிவியில் காட்டினாங்க. மு.க.ஸ்டாலின் சார் கூட இருக்கறது பாத்து  எங்க அம்மாவுக்கு சந்தோஷம். போட்டோ மட்டும் அனுப்பிடுங்க சார்", என்றார். " வாட்ஸ் அப் வந்திடுச்சிம்மா. பிரிண்ட் போட்டு அனுப்பிடறேன்", என்றேன்.

செம்பருத்தி தன்  படத்தை பார்ப்பதற்கு முன் , உலக அளவில் சென்று விட்டது தளபதி அவர்களது முகநூல் மூலமாக.

# தளபதி அவர்களது வாழ்த்து பெற்ற செம்பருத்தி !

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

'தலைமை' ஆசிரியர் தளபதி !

"என்ன மாவட்டம் மழ உண்டா?". " கொஞ்சம் தான்ணே பேஞ்சுது", என் பதில். "எங்கூர்லயும் மழ இல்ல மாவட்டம். ஆத்துலயும் தண்ணி வர்ல்ல", ஆதங்கப்பட்டார் அண்ணன் பூண்டி கலைவாணன். திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர். என்னை எங்குப் பார்த்தாலும் 'மழையில்' தான் ஆரம்பிப்பார். மண்ணின் மைந்தர், மண் பாசம் மிக்கவர். நான் கொஞ்சம் தணிந்தக் குரலில் பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.

" உங்க ஊருல நிலத்தடி நீர் என்ன மட்டத்துல இருக்கு, போர் எத்தன அடி ஆழம்?, மோட்டார் எத்தன அடியில நிக்கும்?" என அவர் தொடர்ந்து வினவ, நான் சகஜமாக பதில் அளிக்க ஆரம்பித்தேன். அவர் திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் அவல நிலையை சொல்லிக் கொண்டு வந்தார். டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, பேசும் சுவாரஸ்யத்தோடு உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் தளபதி அவர்களது காரில். முன் சீட்டில் தளபதி. பின் சீட்டில் எங்கள் இருவர் இல்லாமல் முரசொலி செல்வம் அவர்கள். முரசொலி மாறனின் தம்பி, தலைவர் கலைஞரின் மருமகன்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர். தமிழகத்தின் பிரதானத் தலைவராக உருவெடுத்திருப்பவர்.  அவருக்கு வரும் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டு, வாட்ஸ் அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது எங்கள் உரையாடலிலும் பங்கெடுத்தார் தளபதி. சிலர் இது போல் பேசுவதை இடைஞ்சலாக காட்டிக் கொள்வார்கள், எனது அனுபவம். ஆனால் அவர் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

இது பிப்ரவரி 5 அன்று நடந்தது. அன்று காலை தளபதி அலுவலகத்தில் இருந்து அழைப்பு. கொலையுண்ட "நந்தினி" இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறுவதற்காக தளபதி வர விரும்புகிறார்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள் என தகவல் சொன்னார்கள். சில நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு.

சில நொடிகளில் தளபதி அவர்களிடம் இருந்து அழைப்பு. "சங்கர், சாயந்தரம் வந்திடலாமா? திருவாரூர்ல இருந்து எப்படி வரலாம்? நான் மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிடுவேன்". " கும்பகோணம் வழியா வந்திடலாங்க அண்ணா". நந்தினிக் குறித்த சில செய்திகளை நான் சொல்ல முற்பட்டேன். அவர் அவற்றை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். "இப்போ புரோக்ராம வெளியில் சொல்ல வேண்டாம். தேவை இல்லாத கூட்டம் கூடிடுவாங்க. அவங்க குடும்பத்தினரிடம் ஃப்ரியா பேச முடியாது", என்றார்.

மாலை கும்பகோணம் கிளம்பினோம். வரும் வழியில் கலைவாணன் அழைத்தார்," மாவட்டம், ஆண்டிமடம் போகிற வழியில இருக்கா?". "இல்லண்ணே, ஏன்?". " தளபதி அப்பாவ பாக்கணும்னாங்க". "அப்பா ஊரில் இல்லை. செக்கப்புக்கு திருச்சி போயிருக்காங்க".

கும்பகோணத்தில் வரவேற்றோம். காரில் ஏறியவுடன் என் தந்தை நலம் குறித்து விசாரித்தார்.

சிறுகடம்பூர் கிராமம் வரை பல இடங்களில் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். குமிளியம் கிராமத்தில் வெடி வெடித்து வரவேற்றனர். கார் கிளம்பிய உடன், " என்ன சங்கர் துக்கம் விசாரிக்கப் போறோம். வெடி வெடிக்கறது தப்பில்லையா?", என்றுக் கேட்டார். "ஆர்வக் கோளாறுல செஞ்சிட்டாங்க அண்ணா", சமாளித்தேன்.

கார் சிறுகடம்பூர் கிராமத்தை அடைந்தது. முக்கியச் சாலையில் இருந்து ஊருள் சென்று, தெரு சாலையில் திரும்பிய கார் அந்த சிறு சிமெண்ட் சாலை முன் நின்றது. கட்டுக்கடங்காக் கூட்டம். அலையடிக்கும் கூட்டத்தில் இறங்கி நடந்தார். சிமெண்ட் சாலையில் இருந்து ஒருவர் நடக்கும் பாதை நந்தினி வீட்டுக்கு. அதில் வந்து நந்தினி படத்திற்கு மாலை அணிவித்தார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பெருங் கூட்டத்தில் யார் அவரை இடிக்கிறார்கள் என்றுக் கூட தெரியவில்லை. மணி 7.00 ஆகியிருந்தது. இருட்டி விட்டது. திரும்புகையில் சிமெண்ட் சாலையில் பத்திரிக்கையாளர்கள் மறித்தனர். இரைச்சல் அடங்கக் காத்திருந்து பேட்டியளித்தார். கார் ஏறிக் கிளம்பினோம்.

அடுத்து வந்த காரில் இருந்து முன்னாள் எம்.பி அண்ணன் ஏ.கே.எஸ் விஜயன் தளபதிக்கு அலைபேசியில் அழைத்து காபி இருக்கிறது என்று சொல்ல, வேண்டாம் என மறுத்தார் தளபதி. அவர் வற்புறுத்தவே அலைபேசியை என்னிடம் கொடுத்தார்கள் தளபதி. " சங்கர், எங்கேயாவது ஓரமா நிறுத்துங்க. அண்ணன் காஃபி சாப்பிடட்டும். மதிய சாப்பாட்டுக்கு பிறகு எதுவும் அண்ணன் சாப்பிடல" , என்றார் விஜயன். செந்துறை தாண்டி கார் நிற்கக் கூடிய ஒரு மரத்தடியை காட்டினேன்.

மரத்தடியில் இறங்கி நின்று காஃபியை அருந்தினார். கார் ஏறிய உடன்,"சங்கர் எத்தனை மணிக்கு திருச்சி போவோம்?" என்றுக் கேட்டார். "ஒன்பதாயிடும்" என்றேன். "நேரு காத்திருப்பார். வரவேற்பிற்கு போயிடணும் அவசியம் வரணும்னு சொல்லி இருக்கார். நேரு கிட்ட பேசி, எந்தப் பாதையில் வர்றோம்னு சொல்லிடுங்க"என்றார்.

08.40 மணிக்கு திருச்சி சுங்கச்சாவடியை அடைந்தோம். " வரவேற்புக்கு போனா சரியா இருக்கும்ல?",என்றுக் கேட்டார்.  அண்ணன் நேரு அவர்களும், அண்ணன் ஆ.ராசா அவர்களும் காத்திருந்தனர். நான் விடைப்பெற்றேன். "பத்திரமா போங்க சங்கர்".

முக்கிய நிகழ்வுகளை மனதில் வைத்திருந்து செல்லுதல், கழக மூத்தவர்களை நினைவில் வைத்து விசாரித்தல் - சந்தித்தல், எளிமையாய் இருத்தல், பதற்றம் இல்லாமல் இயல்பாக இருத்தல்,  தோழர்கள் மீது அக்கறையாய் இருத்தல், அடுத்தவர் கருத்துகளை கவனித்தல் என தனது ஒவ்வொரு அசைவிலும்  தலைமைப் பண்புக்கான பாடத்தை  போதித்தார் தளபதி.

# எம் 'தலைமை' ஆசிரியர் தளபதி வாழ்க !

செவ்வாய், 3 ஜனவரி, 2017

உண்மையின் குரல்

அதிமுக கரைவேட்டியோடு ஒரு சிலர், கோபாலபுரம் தலைவர் கலைஞர் இல்லம் முன்  நிற்பதை பார்த்து கழகத் தோழர்களுக்கு சந்தேகம். காவல்துறையினரும் கவனிக்கின்றனர். அவர்களை அணுகி என்னவென்று விசாரிக்கிறார்கள்.  அப்போது வீட்டின் முகப்பறையில் இருந்த தளபதி  அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்திடம் அந்த அதிமுகவினரை கூப்பிட சொல்கிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பார்க்க  கரூரில் இருந்து வந்த  அதிமுகவினர் 12 பேர் அவர்கள். ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்து விட்டு   தலைவர் கலைஞரை பார்க்க அதிமுக கரைவேட்டியுடன் கோபாலபுரம் வந்துள்ளனர். அதிமுக கரை வேட்டியுடன் அனைவரும் உள்ளே வந்துள்ளனர். அவர்களிடம்  தளபதி, "சென்னையில் எங்கெங்கு எல்லாம் போய் பார்த்தீங்க? எனவும், உங்கள் ஊர் என்ன? பெயர் என்ன? என்ன தொழில் பண்றீங்க" என எளிமையாக அவர்களிடம் 15 நிமிடம் பேசியுள்ளார்.

பின்னர், "போட்டா எடுத்துக்கலமா?" எனக்கேட்ட அவர்களிடம் "இதென்ன கேள்வி? வாங்க" என அருகில்  அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் தளபதி.
அப்போது தளபதியிடம் பேசிய அவர்கள், "எங்கம்மாவை கொன்னுட்டாங்க, நீங்க தான் கேஸ் போட்டு கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கனும்" எனக் கூறியுள்ளனர்.

அடுத்த நாள் இதே போல ஜெயலலிதா நினைவிடம் வந்த ஒரு குடும்பமும் கோபாலபுரம் வந்துள்ளனர். அவர்களுக்கும் தளபதி அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு. அவர்களை தனக்கு பக்கத்து இருக்கையில் அமர சொல்ல, கூச்சப்பட்டுள்ளனர். தனது சகோதரி செல்வி அவர்களை அழைத்து அவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளார், "இவங்க என் சகோதரி செல்வி. அவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி". அவர்கள் அவரது எளிமையை கண்டு பிரமித்திருக்கின்றனர்.

வெளியில் வந்த அவரை ஊடக நிருபர் பேட்டி எடுக்க," தளபதி ஸ்டாலின் தான், அம்மா இறப்பு குறித்து உண்மையை வெளியே கொண்டு வரணும். அவர் தான் அடுத்த முதலமைச்சர். அதுவும் மூணு மாதத்தில் நடக்கும்", என்று கூறுகிறார். அது அவருக்கு ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட கோபத்தின் தாக்கம். இவரால் தான் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை.

இது ஏதோ ஜெயலலிதா மரணத்தால் தற்போது ஏற்பட்ட நம்பிக்கை அல்ல. தனது அரசியல் பயணம் துவங்கியதில் இருந்து, தளபதி நிதானமாக எடுத்து வைத்த அடிகளால் ஏற்படுத்திய நம்பிக்கை. ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் பேச வேண்டியவற்றை மட்டுமே பேசுபவர்.

சில தலைவர்கள் இருக்கிறார்கள், காதல் மனைவியிடம் கூட போர்களத்து வீரனை போல் பேசுவார்கள். சிலர் எதிரில் இருக்கும் கூட்டம்  கை தட்ட,தட்ட டெஸிபல் கூடி பேசி வழக்கு வாங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், முதல் நாள் பேசியதற்கு அவர்களே மறுநாள் மறுப்பறிக்கை வாசிப்பார்கள்.

இவர் குறிப்பு வைத்துக் கொண்டு பேசுவதை கேலி செய்வோரும் உண்டு. தனது சொல்லுக்கான வலு அவருக்கு தெரியும். அதில் பிழை இருக்கக் கூடாது என்று தான் குறிப்பு.  அதனால் தான் இன்றைக்கும் தான் சொன்னதில் இருந்து பின் வாங்காமல் நடை போடுகிறார். முழ நீளம், மூச்சு வாங்க பேசி விட்டு, என்ன பேசினோம் என்று தெரியாமல் முழிப்பதில்லை.

இவரது உரையில் அலங்கார சொற்கள் இருக்காது, ஆவேசம் இருக்காது. ஏன், அண்ணாவை போல் அடுக்குமொழி இருக்காது, தலைவர் கலைஞரை போல் இலக்கிய நயம் இருக்காது. ஆனால் உண்மை இருக்கும். அதை  மக்கள் நம்புகிறார்கள் என்பதன் அடையாளம் தான் அதிமுகவினரின் வெளிப்பாடு.

அவரது அடையாளமாக எளிமையும், உண்மையும் கொள்ளப்படுகின்றன. அதற்கு என்றும் வீரியம் கூடுதல்.

இவரது அறிக்கைகள் தான் இப்போது தமிழக அரசின் கண்திறப்பான். ஒவ்வொரு அறிக்கையாக வெளி வர,வர அரசாங்கம் செயல்படுகிறது. ஜெயலலிதா உடல் நலிவுற்ற போது, ஓ.பி.எஸ்ஸிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை தளபதி அறிக்கை தான் அரசை ஆட்டிவிக்கிறது.

# உண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கும் !

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெள்ளத்தில் மூழ்கும் தமிழகம்

அவர் முதல்வர் அல்ல, எதிர்கட்சித் தலைவரும் அல்ல, ஆனால் அவர் தான் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் கடமையாளர்.  தான் இயங்கினால், தானாக எல்லாம் இயங்கும்  என்பதை தளபதி உணர்ந்திருப்பார் போலும்.

நமக்கு நாமே பயணம் மூன்று கட்டமாக முடிந்திருந்தது அப்போது. 11,000 கிலோமீட்டர் தூர நீண்ட பயணம். ஒவ்வொரு நாளும் காலை 08.00 மணிக்கு தயாரானால், நிகழ்ச்சி முடிவு இரவு 10.00க்கா, 12.00க்கா என்பது யாருக்கும் தெரியாது. அப்போது தான் இரவு உணவு.

இப்படியே நடைபயணமாக, சைக்கிள் பயணமாக, வாகனப் பயணமாக சென்று மக்களை சந்தித்து வந்த நேரம் அது. ஒரு நாள் பயணத்திற்கே ஒய்வு தேவை என்பது பலரின் நிலை இன்று. ஆனால் இவருடையதோ இடையறதா, ஓய்வில்லாதப் பயணம்.

அதனால் அவர் ஓய்வெடுப்பார் என்று நினைத்திருக்கும் போது தான் அந்த செய்தி. கடலூர் மாவட்டம் கன மழையால் பாதித்தது என்ற செய்தி.

மொத்த மாவட்டமும் நீரில் மிதக்கிறது. நெய்வேலியில் ஒரே நாளில் 47 செ.மீ மழை. இது வரை காணாத வெள்ளம். பல ஊர்களில் சாலையை காணவில்லை. குறிஞ்சிப்பாடி பகுதியில் வீடுகள் இடிந்தன. ஒவ்வொரு நாளும் உயிர்சேதக் கணக்கு கூடுகிறது. இப்படி கடலூர், "கண்ணீர் ஊர்" ஆனது.

கடலூர் மாவட்டம் அவர் தொகுதியும் அல்ல. அங்கு திமுக எம்.எல்.ஏக்கள் யாருமில்லை. ஆனாலும் அவர் விரைந்தார். ஒவ்வொரு பகுதியாக சென்றார். மக்களை சந்தித்தார், ஆறுதல் கூறினார், தேற்றினார்.

சென்னையிலும் தன் தொகுதியான 'கொளத்தூரோடு' பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை அவர். எங்கெங்கு பாதிப்போ, அங்கெல்லாம் சென்றார். முழங்கால் அளவு நீரில் அசராமல் நடந்தார். கழிவு நீரும்  சில இடங்களில் கலந்தே சென்றது.

வாகனம் செல்லாத இடங்களில் இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியில் சென்றார். எப்படியோ, எந்த வகையிலோ பாதிக்கப்பட்டோரை சென்றடைந்தார். ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகளை வழங்கினார்.

தெருவில் சாக்கடை கலந்த நீர் பெருக்கெடுத்தாலே, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் பலர். வெள்ளம் பெருக்கெடுத்தாலே சிலர் வெளியே வரமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளும் பலர் அப்படித் தான்.

ஆனால் இவர் வந்தார், இவர் மட்டுமே வந்தார்.

இதை சில அறிவாளிகள் 'நாடகம்' என்று எள்ளி நகையாடுகிறார்களாம்.

இருக்கட்டும், தன் சகோதரன் அடிப்பட்டால் துடிப்பதையும் நாடகம் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அதில் நாம் சிறந்த நடிகராக இருப்பது தவறு இல்லை.

தன்னலம் மறந்து, பொது நலம் காக்கின்ற தலைவன் அவர். அவர் நடிகர் என்றால், நாமெல்லாம் நடிகர்களாக முயற்சிக்க வேண்டும்.

# இவரது அன்பு வெள்ளத்தில் மூழ்குகிறது தமிழகம் !