பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சட்டமன்றத்தில் துணைக் கேள்வி கேட்க பட்டபாடு.....

சட்டசபையில் மூன்று நாட்களாக எனக்கு துணைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு தரப்படவேயில்லை. கைத் தூக்கி தூக்கி அசந்து போனேன். ஒரு கட்டத்தில் என் அருகில் இருப்போர்,"நீ கைத் தூக்க வேண்டாம். உன்னால் துணைக் கேள்வி வாய்ப்பே மறுக்கப்படுகிறது" என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். 

இன்றும் மூன்று துணைக் கேள்விகளுக்கு வாய்ப்புக் கேட்டு கைத் தூக்கினேன். என்னை பார்க்கவே மாட்டார். என் பக்கமே திரும்ப மாட்டார். அவரது உதவியாளர்கள் பெயர் எழுதிக் கொடுத்தாலும் கண்டுக் கொள்ளமாட்டார்.

இப்படியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் ஒரு கட்டத்தில் கொதிநிலையை எட்டிவிட்டேன். தி.மு.க கொறடா அண்ணன் சக்கரபாணி என்னை சமாதனப்படுத்தினார். அவர் வற்புறுத்திய பிறகு, கேள்வி கேட்க வாய்ப்பளித்தார் சபாநாயகர். ஒரு மர்மப் புன்னைகையோடு.

"குன்னம் தொகுதியில், செந்துறை ஒன்றியத்தில், செந்துறையையும் பெண்ணாடத்தையும் இணைக்கும் சாலை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. ஆனால் அதில் மூன்று கி.மீ தூரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது. அதனால் அகலப்படுத்த முடியாமல் இருந்தது. அந்தப் பகுதியை நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைவு செய்ய ஊராட்சி ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த சாலை அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலை. இந்த சாலையினை ஒட்டி சிமெண்ட் ஆலைகள், சர்க்கரை ஆலை உள்ளன. சாலையை ஒட்டியே சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் உள்ளன. தேவையான அளவு போக்குவரத்து அடர்வு உள்ளதாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளிலும் உறுதியாகி அறிக்கை நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி கொடுத்தால் எங்கள் பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்து தர அமைச்சர் முன் வருவாரா ?" என்று கேட்டேன்.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி," ஊராட்சி ஒன்றிய சாலை ஒப்படைப்பு செய்வதை நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக் கொண்டிருந்தால், உறுப்பினர் சொல்வது போல் போக்குவரத்து அடர்வு இருந்தால் அகலப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்" என பதிலளித்தார்.

மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி சொன்னேன். அதை சபைக் குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்.

# நன்றிய கூட....


                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக