பிரபலமான இடுகைகள்

திங்கள், 11 நவம்பர், 2013

சட்டமன்றம் 29.10.2013 கேள்வி நேரம்.

29.10.2013 செவ்வாய் கிழமை. கேள்வி நேரம். உள்ளாட்சித் துறை.


தரங்கம்பாடி பேரூராட்சியில் பாதாளசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுமா ? என்பது முதன்மைக் கேள்வி. எனவே அதனை ஒட்டி துணை கேள்வி கேட்டவர்கள் தங்கள் தொகுதிக்கு பாதாள சாக்கடைத் திட்டம் கேட்டார்கள். எல்லோருக்கும் ஒரே பதிலை சிறிது மாற்றி மாற்றி சொல்லி வந்தார் அமைச்சர் முனுசாமி.

கள்ளக்குறிச்சி ச.ம.உ அழகுவேலு,"கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடை அமைக்கப்படுமா ?" என்று கேட்டதற்கு, "நகராட்சி, பேரூராட்சிகள் முடித்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும்" என்றார். சலசலப்பு எழுந்தது. அருகில் இருந்த அமைச்சர் மோகன் ஏதோ சொல்ல, "பேரூராட்சியா ? பேரூராட்சிக்கு முன்னரே சொன்னது போல அம்மா அறிவுரைப்படி விரிவான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. செயல்படுத்தப்படும்" என்று சமாளித்தார். "கண்டக்டர்" பிரச்சியினைலிருந்து மீளவில்லை போல என்று கமெண்ட் வந்தது.

தே.மு.தி.க (அதிருப்தி) மைக்கேல்ராயப்பனின் நியாயவிலைக் கடை கட்டப்படுமா ? என்றக் கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.ராஜூ "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கட்ட ஆவன செய்யப்படும்" என்றார். ஆனால் பதில் குறித்து கவலை கொள்ளாத மைக்கேல் "இறை தந்த கொடையே, இலை தந்த சிலையே, சந்தியா தாய் தந்த பகுத்தறிவு பக்தியே, வல்லரசு போற்றும் நல்லரசே, வடக்கு வழி பார்த்து காத்திருக்கும் எம் அரசே, நதி நீர் காத்த நல்லதொரு மேய்ப்பரே, வடக்கும் வாழனும் ஆனால் தெற்கு ஆளனும் என்றிருக்கும் எங்கள் வரமே, தவமே. அறிவிப்புக்கு நன்றி" என்று கொட்டி மூச்சு விட்டார்.

மூன்று நாட்களாக எனக்கு துணை கேள்வி கேட்கும் வாய்ப்பு தரப்படவேயில்லை. கைத் தூக்கி தூக்கி அசந்து போனேன். ஒரு கட்டத்தில் என் அருகில் இருப்போர்;"நீங்கள் கைத் தூக்க வேண்டாம். துணைக் கேள்வி வாய்ப்பே மறுக்கப்படுகிறது" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்றும் மூன்று துணைக் கேள்விகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தி..மு.க கொறடா சக்கரபாணியும் வற்புறுத்திய பிறகு, செந்துறை-பெண்ணாடம் சாலை அகலப்படுத்தல் குறித்து கேள்வி கேட்க வாய்ப்பளித்தார் சபாநாயகர். ஒரு மர்மப் புன்னைகையோடு.

சங்ககிரி ச.ம.உ விஜயலட்சுமிபழனிசாமியின் "நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படுமா ?" கேள்விக்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சேலம் மாவட்ட விபரங்களை எல்லாம் கூறிய பின்னர்  சுதாரித்து, "ஏற்காடு தேர்தலால் சேலம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி நடைமுறையில் இருப்பதால் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்" என்று பதிலளித்தார். 

போக்குவரத்துத் துறையில் லால்குடி ச.ம.உ சௌந்தரபாண்டியன் தன் தொகுதியில் கடந்த ஆட்சியில் விடப்பட்ட சில பஸ் ரூட்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று சொல்ல வந்தவரை பேச விடாமல் தடுத்து கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு சொல்ல முடியாது என்று அவர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். நிறுத்தப்பட்ட பஸ்களை திரும்ப விடனும்னு கேக்கறது குற்றமா ? என்று போராடி பார்த்தார் சௌந்தரபாண்டியன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்விக்கு பதிலளித்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், அமைச்சரான பிறகு அவையில் பேசும் முதல் பேச்சு என்பதால் இரண்டு நிமிடம் ஜெயலலிதாவை வாழ்த்தி பதிலளித்தார். மறு கேள்வி கேட்ட உதயக்குமார் தன் பங்குக்கு மூன்று நிமிடம் வாழ்த்தி நன்றி சொன்னார். இவர் இருப்பதை காப்பாற்றிக் கொள்வதற்கும், அவர் விட்டதை பிடிப்பதற்கும் வாழ்த்து மழையில் போட்டி போட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக