பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சொர்க்கமே என்றாலும்...

கல்லூரி நினைவுகள் நம்மை 'டைம் மெஷினில்'  ஏற்றி கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். அதே போல் இன்னொரு விஷயம் இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் நம்மை கொண்டு நிறுத்தும் அது. அந்த காலக்கட்டத்திலேயே, அந்தப் பொழுதிலேயே இருத்தி விடும். அது தான் இசை. அதிலும் குறிப்பாக அவரது இசை. ஆம், இசைஞானியின் உயிர் ஊடுருவும் இசை.

ஏலகிரி கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் இசைஞானியும் பங்குக் கொண்டார், இசை வடிவில். பாடகர் ஸ்ரீராம் அவர்கள்  80-களின் பாடல்களை பாடி எங்கள் நினைவுகளை கடத்துவதற்காக சென்னையில் இருந்து வந்திருந்தார். பிண்ணனியில் பாடலின் இசை ஒலிப்பேழை மூலம் ஒலிக்க, அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். அதில் நேயர் விருப்பம் கேட்டு நண்பர்கள் கோரிக்கை வைத்தவாறு இருந்தனர்.

ஸ்ரீராமும் அசரவில்லை. கேட்டப் பாடல்களையும், அவர் தெரிவு செய்து வைத்திருந்தப் பாடல்களையும் பாடினார். பாடல்களின் வரிசையில் எங்களை தூண்டும் பாடல் வந்தது. அது நாங்கள் கல்லூரி காலத்தில் கொண்டாடிய பாடல்.

"நீ ஒரு காதல் சங்கீதம். வாய்மொழி சொன்னால் தெய்வீகம்". மனோ, சித்ரா குரல்களில் பாடல் தேனருவியாக ஓட, எல்லோருக்கும் கல்லூரி நினைவு. ஸ்ரீனிவாசா தியேட்டரில் 'நாயகன்' திரைப்படம் பார்த்த நினைவு. கமலஹாசன், சரண்யா இணையின் அன்னியோன்னியம் இன்றும் பசுமை. ஸ்ரீராம் இழைத்துப் பாடினார், அது இன்னும் இனிமை. 'நாயகன்' எங்களது கல்லூரி காலத்தின் இரண்டாம் ஆண்டில் 1987ல் வந்தது.

"பருவமே புதிய பாடல் பாடு. இளமையின் பூந்தென்றல் ராகம்  ". மிக அருமையான, ரம்மியமான, மென்மையானப் பாடல். பாடல் பாட ஆரம்பித்தவுடன் சிலருக்கு கல்லூரி நினைவே வந்து விட்டது. பாடல் துவக்கத்திலும், பிறகும் 'டொக், டொக்' என ஓடுகின்ற ஒலி ஒலிக்கும். கல்லூரி காலத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டால் செய்வது போன்றே, இப்போதும் சிலர் மேடையில் ஜாகிங் போனார்கள். அதில் சிவசங்கரும் அடக்கம்.

அடுத்த ஹிட், "மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு, ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு". கல்லூரி காலத்தின் கடைசி ஆண்டுப் பாடல். கிராமத்து இசையால் பாமர மக்களை மட்டுமல்ல, அந்தக் காலக்கட்டத்து கல்லூரி மாணவர்களான எங்களையும் இளையராஜா கட்டிப் போட்டது, இப்போதும் ரிப்பீட் ஆனது. ஆமாம், இப்போதும் அனைவரும் மயங்கி ரசித்தோம். ஆடாத செந்திலும் நடனமாடினார்.

அப்புறம் சத்தியசீலனை பாடச் சொல்லி கோரிக்கை எழுந்தது. சத்தியசீலன் பிரபல பாடகர். பாடகர் மாத்திரமல்ல, சிறந்த ஓவியர். நாங்கள் கேள்விபட்டது இல்லையே, எப்படி பிரபல பாடகர் என்ற கேள்வி எழும். எங்கள் கல்லூரியின் பிரபல பாடகர் அவர். ஆமாம், சத்தியசீலன் எங்கள் கல்லூரி நண்பர். கல்லூரி மேடைகளின் இன்னிசைப் பாடகன். நாங்கள் எங்கு சந்தித்தாலும், சத்யா பாடியாக வேண்டும்.

சத்யா மைக்கை பிடித்தார். " சிந்தனை செய் மனமே சிவகாமி மகனே சண்முகனே" எனத் துவங்க ஒரே சலசலப்பு. பழையப் பாடலாக இருக்கிறதே என. பாடிக் கொண்டெ வந்தவர் அதே மெட்டில்,"ஜனனி ஜனனி ஜகத்தாரணி நீ" என அடுத்தப் பாடலுக்கு தாவ, ஒரேக் கைத்தட்டல். அப்போது தான் புரிந்தது அவர் ஒரே ரிதத்தில் வருகின்ற பாடல்களை தொகுக்கிறார் என.

அடுத்து 'மன்னவன் வந்தானடி'. இதை இழைத்துக் கொண்டே போனவர்," அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" எனத் தாவினார். சத்யாவின் இசைஞானம் எல்லோருக்கும் புலப்பட்டது. அடுத்து 'இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்'. அப்படியே "சாச.. ரீரீ... நீ.. ச ச நீ" என சாஸ்திரீய சங்கீதம் போல் முழங்கியவர் திடீரென "காற்றினில் வரும் கீதம்" என தாவினார். கைத்தட்டல் ஏலகிரியை எழுப்பியிருக்கும்.

அடுத்த நேயர் விருப்பத்தையும் நிறைவேற்றினார் சத்யா. அது வெளிநாடு வாழ் தமிழ்மக்களின் விருப்பப் பாடல். முகில்வண்ணனின் ஃபேவரைட். இசைஞானி இசையமைக்கும் போதும், கங்கை அமரன் பாடல் எழுதும் போதும் நினைத்திருக்க மாட்டார்கள், இது வாழ்வு தேடி வெளிநாடு சென்ற தமிழர்களின் தேசியகீதம் ஆகுமென்று. தம் கிராமம் விட்டு சென்னை வந்தவர்களுக்கும் இது மனதுக்கு பிடித்தப் பாடலாகத் தான் இருக்கும்.

"சொர்க்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?"

பாடலின் சில வரிகள் தெரியாத சத்யா தன் மனம் போனப் போக்கில் வார்த்தைகளை நிரப்பி சமாளித்தார். அதுவும் ஒரு சுவாரசியம். அதில் அவர் முடித்த விதம், கைத்தட்டல்களை அள்ளியது.

# சொர்க்கமே என்றாலும் நம் 'அண்ணாமலை'க்கு ஈடாகுமா?

சனி, 4 பிப்ரவரி, 2017

கல்லூரி காலம்

ஒரு வாரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் போராளி மோடில் இருந்த மனநிலையை 'ரிலாக்ஸ் மோட்'க்கு மாற்றியது கல்லூரி நண்பர்கள் சந்திப்பு. உடலை குளிர்ச்சியூட்டியது ஏலகிரி தட்பவெப்பம். அதனால் ஏலகிரி சந்திப்பு இளமையாக்கியது.

ஏலகிரியில் சுற்றிப் பார்க்க குறிப்பிட்ட சில இடங்கள் தான். பக்தர்களுக்கு இரண்டு கோவில்கள். ஒரு படகு பயண ஏரி. ஒரு பூங்கா. ஒரு குறு நகரத்துக்கான கடைவீதி. அங்கே தொந்தரவு இன்றி, கிளைமேட்டை அனுபவிப்பதற்காக மட்டுமே செல்ல வேண்டும்.

ஜெ-வின் ஹெலிகாப்டர் வெள்ளப் பார்வையிடல் போல், காரில் இருந்தே அவற்றை பார்வையிட்டேன் நான். சிலர் அந்த ஊர் முருகனையும் விடாமல் தரிசித்து திருநீறு தரித்து வந்தனர். ஒருவர் பெருமாள் தரிசனம் என்றார். நாம் சூரிய தரிசனத்தோடு சரி என்பதால் அவர்களை பேட்டி எடுப்பதில் பொழுது போனது.

ஒரு மாதம் முன்பு கென்யா சென்ற சாய்குமார் இந்த சந்திப்பிற்கு வந்தார். சிங்கப்பூரில் இருந்து மூர்த்தி, மன்னை மணி. பணி நெருக்கடிக்கிடையே ஒரு இரவாவது நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று பெங்களூரில் இருந்து வந்த நந்தா. மாலையில் இருந்து இரவு இரண்டு வரை, "இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன்" என போன் அடித்து பலரையும் தூங்க விடாமல் புண்ணியம் சேர்த்துக் கொண்ட கேட் ராமசாமி.

சிதம்பரம் பல்கலைக்கழகத்திற்கு போய், பழைய மாணவர்கள் என்ற முறையில் தங்கள்  செலவில் டிபார்ட்மெண்டிற்கு ஒரு ஷெட் அமைத்துக் கொடுத்து விட்டு வந்த சிவில் அண்ட் ஸ்ட்ரக்சர்ஸ் டீம். லட்சுமணன் தலைமையில் 100 கி.மீ கூடுதலாக சுற்றி தலையை சுற்றி மூக்கை தொட்டக் கதையாக வந்து சேர்ந்தது அந்த டீம். கடைசியில் "என்னய்யா ஏலகிரிய இங்கக் கொண்டாந்து வச்சிருக்கீங்க", என்ற கேள்வி வேற.

ராமன் கதை தான் நெகிழ்வு. ராமன் மும்பையில் பணி புரிகிறார். விமான டிக்கெட் போட்டிருக்கிறார். திடீரென விமானம் ரத்து. அசரவில்லை ராமன், பஸ் ஏறினார். மும்பை - பெங்களூர் - ஏலகிரி பயணம். இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் பயணம். நண்பர்களை சந்திக்கும் உணர்வால் உந்தப்பட்டு, நீண்ட பேருந்து பயண சிரமத்தை ஏற்றுக் கொண்டு வந்து சேர்ந்தார் ராமன்.

அதேபோன்று ராம்கி. விசாகப்பட்டினம் அருகில் கடலினுள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணி. விசாகப்பட்டிணத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பணிக்கு சென்றால் அங்கே 15நாட்கள். அடுத்த 15 நாட்கள் ஓய்வு சென்னையில். விடுப்பு போட்டால் 15நாள் ஷிப்ட் முடிந்து தான் மீண்டும் பணி. சந்திப்பிற்காக விடுப்பு எடுத்து வந்தார். முப்பது நாட்கள் கழித்து தான் மீண்டும் டியூட்டி. பரவாயில்லை என்று வந்து விட்டார்.

இன்னொரு நண்பர், பேர் சொன்னால் மாட்டிக் கொள்வார். அரசுப் பணி. மூன்று நாட்கள் அடுத்த மாவட்டத்திற்கு டெப்டேஷன் என்று வீட்டில் சொல்லி வந்து விட்டார். உணர்வு தான் காரணம்.

அந்த உணர்வு தான் இந்த கல்லூரி நண்பர்கள் சந்திப்பின் அடிநாதம். கல்லூரி முடித்து 27 ஆண்டுகள் கழித்தும் அந்த நட்பு ஈர்க்கிறது. இன்னொருபுறம் கவலைகளற்ற அந்தக் கல்லூரிப் பருவத்திற்கு கொண்டு சேர்த்து விடுகிறது.

காலை 08.10 வகுப்புக்கு 07.50க்கு அலாரம் வைத்து பொறுப்பாக எழுந்து, அவசரமாக குளித்து, சாப்பிடாமல் ஓடி அட்டெண்டெஸ் கொடுத்து, நண்பனுக்காக பிராக்ஸி கொடுத்து, அது ஒரு காலம். பட்டாம்பூச்சியாய் வண்ணமயமாய் பறந்து மகிழ்ந்த காலம். அந்த நினைவுகள் என்றும் சுகமானவை. அதை அவ்வப்போது கிளர்த்து மனதை ரெப்ஃரெஷ் ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு தான் இந்த சந்திப்பு.

இதை எல்லாம் வட்டமேசை மாநாடு நடத்தி பகிர்ந்து மகிழ்ந்தோம். அதை அவ்வப்போது வாட்ஸ் அப் குரூப்பில் அப்லோடி சந்திப்புக்கு வர இயலாதவர்களையும் மகிழ்விக்கும் பணி ஒரு புறம் நடந்துக் கொண்டிருந்தது. அதற்கு உலகளாவி ரசிகர்கள் காத்திருந்தனர். இதில் எங்கள் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் குரூப்பில் ஹரி "மச்சி நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்து எத்தனை பேர் போயிருக்கீங்க?" என்று கேள்வி. பதிலை செல்ஃபியாய் அனுப்பி வைத்தோம்.

# கல்லூரி  நட்பு காலங்களை கடந்தது !

புதன், 1 பிப்ரவரி, 2017

ஏலகிரி மேகம்

"மாம்ஸ் நீ வந்துடு". " இல்ல. நான் வர்றது சிரமம்னு நினைக்கிறேன்". "நீ வர்றன்னு ஸ்ரீதர் சொல்லி தான் நாங்க கன்ஃபார்ம் பண்ணோம். வந்துடு", சங்கரும் செந்திலும் அழுத்தினார்கள். சும்மாவே ஊர சுத்திக்கிட்டிருக்கோம், இதுல ஏலகிரி மலைப்பயணம்னு வேற சொன்னா, சகாராப் பாலைவன ஹீட் வரும். "நீங்க மட்டும் எல்லா இடமும் போய்ட்டு வந்துடுங்க. நாங்க இங்கேயே இருக்கோம்".

வேற வழியில்ல, ஓப்பன் செய்தேன். மூன்றாவது முறை சொல்லும் போதும் "எங்கப் போறீங்க?", அப்படின்னு கேள்வி வரும் போது தான் இன்னும் மனசுல ரெஜிஸ்டர் ஆகலன்னு தெரிஞ்சுது. ஆனா அங்க கதை வேற. "அண்ணே பேர ரெஜிஸ்டர் பண்ணியாச்சி, நீ வர்ற", இது ஸ்ரீதர். கல்லூரி நண்பர்கள் சந்திப்பு. அதுக்குள்ளயா? அது சென்னை, ஒரு வருஷம் ஆச்சி. இப்போ ஏலகிரி.

கிளம்பும் முன் மகன் கேட்டார்," அப்பா, சொல்லவே இல்ல". "அம்மாகிட்ட சொல்லிட்டேன்பா. எத்தனை பர்மிஷன்பா வாங்கறது?". ஒரு வழியா கிளம்பியாச்சி. வழியில் தான் வேலூரில், "சோழநாடு சோறுடைத்து, வேலூர் மாவட்டம் பிரியாணியுடைத்து" கண்டுபிடித்தது. சங்கர் ஆற்காடு என்பதால் தன் பவரை காட்ட வேலூர் கிச்சனில் சாப்பாடு ரெடி செய்தார்.

ஏற்பாடு செய்ய சங்கர் அண்ணன் சேகரும், மச்சான் ரமேஷும் இருந்தார்கள். ரமேஷ் கழக தொழிற்சங்க செயலாளர். மத்திய சங்க செயலாளர், மாவட்ட செயலாளரை வரவேற்க புரோட்டாக்கால் படி பத்து தொழிற்சங்க தோழர்களோடும் சால்வையோடும்  காத்திருக்க, நானோ கல்லூரி நண்பர்களை மகிழ்விக்க முந்தைய சந்திப்பின் போது கொடுத்த "AUETAA 1990"  பொறித்த டி-ஷர்ட்டோடும் ஜீன்ஸோடும் போய் இறங்கினேன்.

வேட்டி, சட்டையில் எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ஜெர்க். " ஹிஹி. கல்லூரி நண்பர்களோடு வந்ததால இந்த டிரெஸ்" என சமாளித்தேன். ஒரு கல்லூரி மாணவனுக்கு தான் எவ்ளோ சோதனை. அப்புறம் தான் அந்த வேலூர் பிரியாணி, நெய் வறுத்த கோழி, இளநீர் பாயசம். பீடாவுடன் வண்டி ஏறினால், கத்தாரிலிருந்து மதன் மொபைலில் பிடித்தார்,"அண்ணே தம்பி ஹரிபாபுவ ஆம்பூர்ல வெயிட் பண்ண சொல்லிருக்கேன்".

"இல்ல மதன். ஃபிரெண்ட்ஸ் மூனு வண்டியில் போறோம். இன்னும் ஜாயின் பண்றாங்க. வரும் போது பாக்கிறேன்". வேலூர் கிச்சன் ஸ்டேடஸின் எபெக்ட். இன்பாக்ஸுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே மலையடிவாரம் அடைந்தோம். இது தான் ஏலகிரிக்கு முதல்முறை. ஒரு முறை தலைவர் கலைஞர் சென்றதை கேள்விப்பட்டதிலிருந்து போகனும்னு நினைச்சது, இப்ப தான் வாய்த்தது.

மற்ற மலைவாசஸ்தலங்களை ஒப்பிடும் போது, குறைவான உயரம் தான். ஆனால்,  இயற்கை இன்னும் அவ்வளவு கெடவில்லை. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும்  கம்பர், இளங்கோ என தமிழ் ஆளுமைகள் பெயரையும், பாரி, அதியமான் என தமிழ் வள்ளல்கள் பெயரையும் சூட்டியிருக்கின்றனர். தமிழ் மணக்கிறது. ஊர் பெயர்களும் நிலாவூர், அத்தனாவூர், கோட்டூர் என தமிழ் வாழ்கிறது.

ஆனால் வேலூர் மாவட்ட தமிழ் தான் தெலுங்கும் கலந்து மணக்கும். " இன்னாபா செய்றது. ஒஸ்தேனு" டபக்கென்று தெலுங்கு வந்து விழும். அந்த மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தாய்மொழியாகக் கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் தெலுங்கு அறிவார்கள். அண்ணன் துரைமுருகன் உள்பட அனைவரும் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடுவார்கள். மனவாடு தேசம் ஆந்திரா பக்கனே காதா?

மலை மீதேறினோம். ஸ்டெர்லிங் குரூப்பின் ரிசார்ட். ஊர் பேர் அத்தனாவூர் என்றிருந்தது. "ஹலோ, ஏலகிரின்னு சொல்லிட்டு என்னப்பா இங்கக் கூப்பிட்டுகிட்டு வந்துட்டீங்க?". என் மைண்ட் வாய்ஸை இன்னொரு நண்பர் ஒலித்தார். "இது ஏலகிரி இல்ல. இந்த மலைப் பேர் தான் ஏலகிரி மலை. ஏலகிரி அப்படிங்கற ஊர் ஜோலார்பேட்டை பக்கத்தில் இருக்கு" வரலாற்று தகவலை சொன்னார் சிவஞானம்.

"குமரா கூலிங்கிளாஸை கழட்டு. ஊரே கூலா தான் இருக்கு". மீட் ஆரம்பித்து விட்டது.

# ஏலகிரி மேகம் பன்னீர் தூவ ஆரம்பித்தது !

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மனதை வெற்றி கொண்டவர் !

வெற்றிகொண்டான் என்றால் நகைச்சுவை பேச்சாளர் என்பது தான் பொதுவான எண்ணமாக இருக்கும். எந்த அளவிற்கு நகைச்சுவையா பேசுவாறோ, அதே அளவு உருக்கமாக பேசக் கூடியவர். பேச்சாளர்களுக்கு அது அவ்வளவு எளிதில் கைவராத விஷயம். ஏதாவது ஒரு சுவையில் தான் திறமையானவர்களாக இருப்பார்கள். அதே போல எந்த ஒரு செய்தியையும் அவர் அணுகுகிற கோணம், யாரும் அணுகாததாக இருக்கும்.

பத்திரிக்கைகளில் செய்தியை படிக்கும் போது, பக்கத்தில் ஒரு பரிட்சை அட்டையும் பேனாவும் இருக்கும். சில செய்திகளை படித்தவுடன் குறிப்பெடுப்பார். அது மேடையில் சில நேரங்களில் இருக்கும். புத்தகங்களை படித்து, அதில் குறியிட்டிருப்பார். அதே போல கூட்டத்திற்கு முன்பாக எளிமையாக தொண்டர்களிடம் உரையாடிக் கொண்டிருப்பார். பேச்சின் போது இந்த செய்திகள் எல்லாம் வரும். ஆனால் நாம் நினைத்து பார்க்க முடியாத கோணத்தில் இருக்கும்.

அட்டையில் இருக்கும் குறிப்புகளில் கடைசியில் இருப்பது முதலில் வரும். அப்புறம் இடையில் இருப்பது வரும். நூல்களில் படித்த செய்தி வரும். தொண்டர்களின் கருத்து இடம் பெறும். ஆனால் எங்கே எதை முடிச்சிட்டு சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர். தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பார். ஒவ்வொரு மேடையிலும் புதிதாக பேச வேண்டும் என்று செயல்படுவார். பேச்சாளராக விருப்பப் படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி அவர்.

ஜெயலலிதா ஆட்சியின் போது, அவர் மீது நூற்றுக்கும் மேலான அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. வேறு பேச்சாளராக இருந்தால் அதை சொல்லும் போது இயல்பாக கோபப்பட்டு பேசுவார்கள்.

ஆனால் அய்யா வெற்றி அதையே அதகளப்படுத்தி விடுவார். "அது ஒன்னும் இல்ல. நானும் ஜெயலலிதாவும் நேர்ல சந்திச்சிக்கிட்டது கிடையாது. இந்தப் பேச்சு பேசுறானே வெற்றி, எப்டி இருப்பான்னு பாக்கலாம்னு நெனச்சி தான் கேஸ் போட சொன்னது.  ஆனா இந்த காவல்துறை இருக்கே எல்லா ஊர்லயும் கேச போட்டுடுச்சி. அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. இப்போ நாம தான் எல்லா கோர்ட்டுக்கும் இன்ஸ்பெக்‌ஷன் ஆபிசர். ஆமா" என்று இடைவெளி விடுவார். காத்திருக்கும் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.

"கோர்ட்டுக்கு ரெகுலரா போறதுனால ஜட்ஜே கோர்ட்டுக்கு என்ன தேவைன்னு நம்ம கிட்ட தான் கோரிக்க வைக்கிறாரு. நான் பேசுனா குறிப்பெடுத்து முதலமைச்சருக்கு போயிடும்னு நெனைக்கிறாங்க". கலாய்ப்பதில் அதன் உச்சத்துக்கே சென்றவர்.

அதே போல தன் பேச்சில், எதிர்கட்சி தலைவர்களுக்கு நேரடியாக கேள்வி போடுவார். அந்தத் தலைவர்கள் அந்தப் பேச்சை கேட்டாலும் அவர்களை அறியாமல் சிரித்து விடும் அளவிற்கு இருக்கும். நகைச்சுவையும் தெறிக்கும், அதே சமயம் வாதப் பொருளும் வலுவாக இருக்கும்.

அதே போல சேம்சைட் கோலும் போடுவார். சமயங்களில் தலைவர் கலைஞரையே வாருவார். " நான் தெரியாம தான் கேட்கிறேன். இப்போ உங்கள யாரு போராட்டம் அறிவிக்க சொன்னது? ஓட்டு போட்டது அந்த ஜனங்க. இப்ப கஷ்டப்படறது அந்த ஜனங்க. அவங்களே அதப் பத்தி கவலப்படல. நீங்க ஏன் கவலப்படறீங்க?". வாருவது போல தான் இருக்கும். ஆனால் அந்த பாணியில் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவார்.

இதுவே வேறு எந்தப் பேச்சாளராவது பேசினால் சிக்கிவிடுவார்கள். தலைவருக்கு எதிர்கருத்தாக அமைந்துவிடும். ஆனால் தலைவரை பற்றி இவர் பேசுவது கைத்தட்டலை அள்ளும். இது தான் அய்யா வெற்றிகொண்டான் பாணி. சில மேடைகளில் தலைவரை வைத்துக் கொண்டு இது போல் பேசி, தலைவரையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.

1993ல் நடந்த துரோக நடவடிக்கையின் போது, தமிழகம் எங்கும் சுற்றி கழகத்தின் நிலையை வலுப்படுத்தியது இவரது பெரும் பணி. எது குற்றச்சாட்டாக கழகத்தின் மீது வீசப்பட்டதோ, அதையே பிடித்து திருப்பி ஆயுதமாக வீசினார்.

ஆம், அப்போது "தளபதியை தலைவராக்கத் தான் வைகோ நீக்கம்" என அவதூறை அள்ளி வீசினார்கள். உடனே பதிலடி கொடுத்தார் அய்யா வெற்றி. "ஆம். எங்கள் வருங்கால தலைவர் தளபதி ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் கழகத்தை அவர் தான் வழி நடத்துவார்". 

அவர் சொல் பலித்து விட்டது, அவர் எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆம், அய்யா வெற்றியின் அளப்பறிய அன்பிற்குரிய தளபதி அவர்கள் செயல் தலைவர் ஆகிவிட்டார். ஆனால் பார்த்து ரசிக்க, அய்யா வெற்றி தான் இல்லை.

இன்று அவரது நினைவு நாள், என்றும் நினைவில் இருப்பார்.

# கழகத் தொண்டர்களின் மனதை வெற்றி கொண்டவர் !

வியாழன், 26 ஜனவரி, 2017

கொடியரசு தின வாழ்த்து

இரண்டு வருடத்திற்கு முன்னால அப்படி சொல்லி இருந்தா, நானே விழுந்து புரண்டு சிரிச்சிருப்பேன்.  இப்போ நண்டு, சிண்டு வரைக்கும் அத சர்வசாதாரணமா சொல்ல ஆரம்பிச்சிடுச்சிங்க. எல்லாம் இந்த மனுசனால வந்தது தான். வந்தப்ப பயங்கர டெரர்றா தான் இருந்தாரு. ஆனா அப்படியே பயங்கர காமெடியா ஆவாருன்னு  நினைக்கல.

இதுக்கு, அந்த காலத்தில நாம தான் முக்கிய கோரிக்கையா அத வச்சிருந்தோம். பின்னாடி நாட்டு நிலமைய நினைச்சி கைவிட்டோம். நாமளாவது சனநாயக வழி. இயக்கம் கட்டி, ஆயுதம் ஏந்தி போராடினவங்க உண்டு. அதில் உயிரிழப்பும் உண்டு. இப்படில்லாம் போராடி அரச பயங்கரவாதத்ல அந்த இயக்கம் அழிஞ்சே போச்சி. இப்படில்லாம் வரலாறு இருக்கறதனால, இனி வழியே இல்லன்னு மூடின சேப்டர் அது. பொசுக்குன்னு ஒப்பன் பண்ணிட்டாரு அண்ணன்.

கடந்த மாசம் நண்பர்கள் சிலரோட சந்திப்பு. அப்போ சர்வசாதாரணமா அவங்க அந்த சப்ஜெக்ட கையாண்டாங்க. கொஞ்சம் அட்வான்ஸா சிந்திக்கிற குரூப் தான். இருந்தாலும், இது ஓவர் திங்கிங்ஆ இருக்கேன்னு தோணுச்சி அப்போ.  ஆனா இப்போ சரியா தான் யோசிக்கிட்டு இருக்காங்கன்னு ஆயிடிச்சி. எல்லாம் அண்ணன நம்பி தான் யோசிருக்காங்க.

அண்ணன் அந்தத் திட்டத்த அறிவிச்சதுல முதல் பொறி விழுந்துருக்கு. ஆனா சரியா வெளியில தெரியல.  ரெண்டு, மூணு இடத்துல இந்தப் பேச்சு கிளம்பியிருக்கு. இங்க அப்போ கிளம்பல. இப்போ கிளம்பிடுச்சி. நண்டு ஒன்னு வாட்ஸ் அப் வீடியோல பேசுனப்ப இத சொல்லிச்சி. நான் பெருசா நெனைக்கல. ஆனா இன்னைக்கு முகநூல்ல பலரும் கதற்றத பார்த்தா பொறி வலுவாயிருக்குன்னு தெரியுது.

என்னாடா சப்ஜெக்ட்ட சொல்லாம இழுக்கறேன்னு பார்க்கறீங்களா? அவங்க சர்வசாதாரணமா சொன்னாலும், எனக்கு அத சொல்ல தயக்கமா தான் இருக்குது.

ம். அதே தான். தனி நாடு.

முன்னாடி அந்த நண்பர்கள் சொன்னப்ப நானே சிரிச்சேன். அப்ப தான் அவங்க சொன்னாங்க, நாங்கக் கூட இத நாங்களா நினைக்கல. எல்லாப் புகழும் அண்ணனுக்கு தான். அண்ணன் வேற யாரு, நம்ம மோடி அண்ணன் தான். அண்ணன் அவரு கட்சியில எல்லாரையும் காலி பண்ணி கைப்பிடிக்குள் வந்தது அவங்க கட்சிப் பிரச்சினை.

ஆனா அதே டேஸ்ட்ல இந்தியாவையும் கைக்குள்ள கொண்டு வரணும்னு பார்த்தாரு. குஜராத்த டைட்டா வச்சிருந்தது போல இந்தியாவையும். அது ஒரு மொழி பேசற, ஒரு கலாச்சாரம் கொண்ட மாநிலம். அத வச்சிருக்கறது வேற கதை. ஆனா இந்தியா பல மொழி, பல கலாச்சாரம் கொண்ட நாடு. இது மொத்தமா கைக்குள்ள வர்றது சிரமம்னு அண்ணனுக்கு புரிஞ்சுது.

அப்புறம் அவங்க வழிகாட்டி குரூப்போட ஏக இந்தியாவ நிர்மாணிக்க முடிவெடுத்தாரு. அப்பத் தான் இந்தி, சமஸ்கிருதம், பொதுச்சட்டம், பொதுக்கல்வின்னு ஆரம்பிச்சாரு. அப்பவே நம்ம நண்பர்கள் தனி நாடு கோரிக்கைக்கு அண்ணன் உயிர் குடுத்துடுவாருன்னு முடிவெடுத்துருக்காங்க.  பேசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

அப்போ பாத்து தான் அண்ணன் ஒரு சிக்ஸர் அடிச்சாரு. பந்து ஸ்டேடியத்துக்கு வெளியில போயிடுச்சி. ஆமாம், "செல்லாக்காசு" திட்டம் தான். மேற்கு வங்காளம் கிளம்புச்சி.  அது ஏதோ மம்தாவுக்கு மட்டும் பிரச்சினைன்னு நினைச்சாங்க. வங்காளம் தமிழ்நாடு மாதிரி தான், தனி சிந்தனை.  மொத்த இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வித்தியாச சிந்தனை. அதனால அங்க கம்யூனிஸ்ட் கோலோச்சறது.  இப்போ மம்தா.

வடகிழக்கு மாநிலங்கள் பூரா ஒட்டிக்கிட்டு தான் இருக்கு. அதன் போக்கே வேற. காஷ்மீர் கதை தான் தெரிஞ்சது. கேரளா "செல்லாக்காசு" பிரச்சினையில  750 கி.மீ மனிதசங்கிலி நின்னு போராடி இருக்காங்க. இப்புடி ஆளுக்கொரு பக்கம் இழுக்கற நிலை.

அப்போ தான் நம்ம மேல உழுந்துது அடி.  காவேரி தீர்ப்ப ஒத்துக்க முடியாதுன்னு அண்ணன் கம்பெனி சொல்ல, லேசா.  அடுத்து அண்ணன் பொதுக்கல்வி, நீட் பொதுத் தேர்வு, பொங்கலுக்கு விடுமுற இல்லன்னு போட்டுத் தாக்க பொறி நெருப்பாச்சி. ஜல்லிக்கட்டு காள குறுக்க நெடுக்க ஓட, நெருப்பு காட்டுத் தீயாயிடிச்சி. மெரினா புரட்சியப்ப எதிரொலிக்க ஆரம்பிச்சுது. இளைஞர்கள் கோஷமாவே போட்டுட்டாங்க.

இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் "தனி நாடு" கோரிக்கையை பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி.

அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது.

'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'

'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்'

'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'

இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன்.

ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. "வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க ! ".

டிவி விவாதத்துல அய்யநாதன் அழுத்தி சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு ". USA, USSR போல USI (United States of India)ன்னு ஃபீல் கொடுக்கிறாரு.

பாஸ், என்ன தான் நடக்குதுன்னு குழப்பமாயிடிச்சி.

இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கருப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். அப்படியே போன வருசம் இந்த அளவுக்கு 'இந்திய' தேசியக் கொடி இருந்துது. இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தி, நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தி வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம்.

வலியுறுத்தல எல்லாம் அண்ணன் மான்கிபாத்க்கு தான் ரீடைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர் தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும், உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும்.

சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்கக் கைல தான் இருக்கு.

# பாத்து மனசு வைங்க அண்ணன் மோடி !