பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 29 ஜூலை, 2014

இராஜேந்திர சோழன் பராக், பராக் !

இரவு இரண்டாம் ஜாமம் துவங்கியிருந்தது. ஒளிவெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தது பெருவுடையார் ஆலயம். ஆடித் திருவாதிரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆலயத்தினுள் மக்கள் வெள்ளம். ஆலயத்திற்கு வெளியில் மக்கள் கடல்.

                             

ஆலயத்தின் வெளிப்புறத்தில் வரிசையாக விளக்குகள். எண்ணெய் ஊற்றி, திரி போட்டு மக்கள் விளக்கை ஏற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர். பின்னால் வரிசையில் நின்று தங்கள் பங்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தனர் சோழவள நாட்டு மக்கள்.

மெய்காவலர்கள் விழிப்பாக மக்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கும் அங்கும் உலவி கூட்டத்தை நகர்த்தி, புதிதாக வருகிறவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். தளபதிகள் அவர்கள் பணியை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமதிலுக்குள் தரையில் பாவியிருந்த புல்வெளியில் நடந்து, கிழக்கு கோபுர வாயிலைக் கடந்து வெளிப்புறமிருந்த ஆலமரத்தை அடைந்தால், வடக்கு மூலையில் எழில் கொஞ்சும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பும் ஜனத்திரள்.

மேடையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி. ஆடல் பெண்டிர் முத்திரைப் பிடித்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தனர். மெய்மறந்த மக்கள் இசையில் லயித்து தொடையில் தட்டி, தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தனர். இது இரண்டாம் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மூன்றாம் ஜாமம் தாண்டும் போலத் தோன்றியது. மெல்ல நழுவி வாயிலுக்கு வந்தேன். வெண்புரவி நெருங்கி வந்தது. தாவி ஏறினேன். மீண்டும் ஒரு முறை ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தேன். கலசம் மின்னிக் கொண்டிருந்தது. மனமின்றி நகர்ந்தது புரவி.

பெருவழியை அடைந்து இடப்புறம் திருப்பினேன். அங்கும் சோழகங்கம் தளும்புவது போல் ஜனக் கடல் தளும்பியது. கூட்டத்தை ஊடுருவி கடந்து, வேகம் பிடித்தேன். இப்போதும் பெருவழியின் இருபுறமும் மக்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருபுறம் கோவிலை நோக்கி, இன்னொருபுறம் தரிசனம் கண்டு முடித்தவர்கள் கிராமம் நோக்கியும் நடைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு கல் தொலைவு கடந்தவுடன் குருவாலப்பர் கோவில் கண்ணில் பட்டது. விளக்கொளியில் அமைதியாகக் காட்சியளித்தது.

அடுத்த ஒரு கல் தொலைவு கடந்ததும் பெருவழி மேடேறியது. மேட்டில் ஏறும் போது திரும்பிப் பார்த்தேன். ஆலயத்தின் இடது மூலையில் இருந்து வானவேடிக்கை. வண்ண வண்ண ஒளியில் ஜொலித்தது உயர்ந்து நின்ற ஆலயம். மேடேறி இறங்கியது புரவி.

சோழகங்கம். சாலையை தொடும் தண்ணீர். நீரின் சலசலப்பு காதை வருடியது. நீரைத் தட்டி வந்த ஆடிக் காற்று அங்கேயே படுக்கத் தூண்டியது. புரவியும் சாரல் இதத்தில் வேகத்தைக் குறைத்தது. இருட்டிலும் மீன்கள் துள்ளுவது தெரிந்தது.

எதிரில் வந்த லாரியின் உச்ச ஹாரன் சத்தத்தில் சுய நினைவுக்கு வந்தேன். புரவியை பார்த்தேன், டாடா சபாரி கார். ஆம், நேற்றைய மாமன்னன் இராசேந்திரனின் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கு வந்தவர்கள், நிகழ்வு முடிந்து செல்லும் போது தங்களை இராஜேந்திரனாகவே உணரும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள், அவன் தம் பெருமைகள் கேட்டு. அந்த கால நினைவுகளுக்கே போயாயிற்று.

# இராஜேந்திரனாய் உணர்வோம், மண்ணின் பெருமை காத்திடுவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக