பிரபலமான இடுகைகள்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

அன்பர்களின் அதகளம்

வாழ்கையின் நெருக்கடியான தருணங்களை இலகுவாக்க சில மனிதர்கள் இருப்பதால் தான் தொடர்ந்து பயணிக்க இயலுகிறது. அப்படி எனக்கு பலர் உண்டு. அதில் ஒருவர் குமரன். காலையில் முறுக்கான குமரனாக இருப்பவர், மாலை ஆக, ஆக குமழன் ஆகிவிடுவார்.

அவர் வேறு அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர். ஆனாலும் என் நலன் விரும்பி. உலக அரசியல் ஆரம்பித்து உள்ளூர் அரசியல் வரை பேசக் கூடியவர். எல்லோரையும் விமர்சிப்பார், தனது தலைமையையும். பொது விஷயங்களுக்காக ஆலோசனைகள் வழங்குவார். இத்தனையும் அலைபேசியில் அழைத்து.

ஆனால் இத்தனையும் நண்பகல் வரை தான். அதற்கு மேல் என்றால்,"அண்ழே, குமழன் பேசழேன். நல்லாழுக்கீங்களா?" என்பதையே நாலு தடவை கேட்பார். அப்புறம் தான் அதகளம் ஆரம்பிக்கும். இரவுக்குள் நான்கு, அய்ந்து முறை அலைபேசியில் அழைத்து விடுவார்.

அலைபேசியை எடுக்காவிட்டால் தொடர்ந்து மூன்று, நான்கு முறை அழைப்பார். அலைபேசியை எடுத்தாலும் சமாளிக்க முடியாது, எடுக்காவிட்டாலும் சமாளிக்க முடியாது. வேறு யாராவது அலைபேசியை எடுத்து பதில் சொன்னாலும்,"அண்ழன் கிட்ட குடுக்கறியா இல்லியா?" என்று படுத்தி விடுவார்.

ஒரு நாள் நிலைமை சமாளிக்க முடியாமல் போய் விட்டது. இரவு நேரம் தான். இன்று ஒரு தீர்வு காண்வது என முடிவெடுத்தேன். அலைபேசியை எடுத்தேன். "எம்.எல்.ஏ அண்ழே, குமழன் பேசறேன்" என்றார். "எம்.எல்.ஏ இல்ல. இப்ப வெறும் அண்ணன் தான். சொல்லுண்ணே" என்றேன்.

ஒரு நிமிடம் தடுமாறியவர் "ஏன்ழே?" என்றுக் கேட்டார். "எம்.எல்.ஏ பதவிய ராஜினாமா பண்ணிட்டேன்ணே" என்று சொல்லி அலைப்பேசியை வைத்துவிட்டேன். அய்ந்து நிமிடம் கழித்து மீண்டும் அலைபேசி அலறியது. நண்பரிடம் கொடுத்து பேசச் சொன்னேன். "எம்.எல்.ஏ அண்ழன் ராஜினாமா பண்ணிட்டாரா?".

"ஆமாம். யாரோ குமரனாம், அவரு தான் காரணம். அவரு  போனை பேசி சமாளிக்க  முடியாமலேயே ராஜினாமா செஞ்சுட்டாரு" என்று சொல்லி வைத்து விட்டார்.

அன்னைக்கு இறங்குன போதை தான் குமழனுக்கு.

இன்னொரு அண்ணன். இவரும் மாற்றுக்கட்சி அன்பர் தான். இவரு அலைபேசியை எடுக்கலனா, தொடர்ந்து பத்து முறை அடிப்பார். இவருகிட்ட "ழ" பிரச்சினை கிடையாது. ஆனால் அவர் சொல்கிற வேலை முடியாவிட்டால், அவ்வளவு தான். தொலைந்தோம்.

சமீபத்தில் பொதுக்கூட்ட மேடையில் இருந்தேன். அண்ணன் தொடர்ந்து பத்து முறை அடித்தார். மேடையை விட்டு இறங்கி அழைத்துக் கேட்டேன். உறவினர் இறந்துவிட்ட தகவலை சொன்னார். காலையில் வருவதாக சொன்னேன். காலை 06.05க்கு அழைத்து விட்டார். நடைப்பயிற்சியில் இருந்ததால் எடுக்கவில்லை. நடை முடிவதற்குள் பத்து முறை அழைத்திருந்தார்.

இரண்டு திருமணங்களில் கலந்து கொண்டு, மூன்று துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் நம்ம அண்ணன் வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை. ஆனால் அதற்குள் அண்ணன் நூறு முறை அழைத்து விட்டார். எனக்கோ மூன்றாவது முறை தொடர்ந்து அழைத்தாலே அலர்ஜி.

பொதுக்கூட்ட மேடையில் இருந்தாலோ, மக்களோடு இருந்தாலோ, எழுத்துப் பணியில் இருந்தாலோ பிறகு அழைப்பது என் வழக்கம்.  மூன்று முறை அழைத்தாலே லேசாக பிபி ஏறும். நூறு முறை என்றால் கணக்கு பார்த்துக்கணும்.

ஒரு வழியாக மாலை அண்ணன் வீட்டிற்கு சென்றோம். மறைந்தவர் உடலுக்கு மாலை வைத்த பிறகு தான் எனக்கு பிபி குறைந்தது. அமர்ந்தோம். அண்ணன் காதோடு ரகசியமாக சொன்னேன்,"எப்புடிண்ணே இவ்வளவு நாள் உங்களை சமாளிச்சாரு, செத்துப் போனவரு? அதுக்கு பாராட்டாகத் தான் இந்த மாலையை போட்டேன்".

அண்ணன் வெடித்து சிரித்துவிட்டார்.

# இப்படி தான் பாஸ் சமாளிக்கிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக