பிரபலமான இடுகைகள்

புதன், 10 பிப்ரவரி, 2016

கலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்

சில அழைப்புகளை மறுத்தால், சில இழப்புகள் நேரிடும். கடந்த வாரம் அழைப்பை மறுக்காததால், வரலாற்றை பிடித்தேன்.

இணைய நண்பர் சகோதரர் விஜய் ஸ்டாலின். திருமண தேதி முடிவான உடனே புக் செய்தார் என்னை.

விஜய்யை பல முறை கழக நிகழ்வுகளில் சந்தித்து நெருங்கிய உறவாகிப் போனோம். தன் தந்தையாரோடு வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். மூச்சும் பேச்சும் கழகம் தான் விஜய்க்கு. அன்றும் அப்படி தான்,  அழைப்பிதழ் வழங்கி, கழகப் பேச்சு தான். வருவதாக உறுதியளித்தேன்.

திருமணத்தன்று தான் உஞ்சினி ஆக்கிரமிப்பு அகற்றல் பிரச்சினை. அது முடித்து தாமதமாகத் தான் செல்ல நேரிட்டது, திருமணத்திற்கு. திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா காத்திருந்தார். மன்னை ராஜகார்த்திக் தொடர்பிலேயே இருந்தார்.

சிறிது சுற்றி, மன்னார்குடி அடைந்தோம். கார்த்திக்காக காத்திருந்தோம். வந்தார் கார்த்தி. அவர் காரை பின் தொடர்ந்தோம். முகம் பார்த்த இளையராஜா கேட்டார்,"அண்ணா சாப்பிடலயா?". "சாப்பிட்டுவிட்டோம் என சொல்ல வேண்டும்", என சொல்லி வந்த நானே சாப்பிடவில்லை என்று உளறி விட்டேன்.

சாப்பிட இறங்கினால், நேரமாகி விடும் என்பதால் சாப்பிடாமலே பறந்து வந்திருந்தோம். விஜய் இல்லம் சென்றோம். மணமக்கள், மணமகள் இல்லம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். மணமக்களை வாழ்த்தி விடைபெற்றோம். ராஜகார்த்தி இல்லத்திற்கு அழைத்தார்.

மகிழ்வாய் சென்றோம். கார்த்தியின் தாயார், தட்டை மேசை மீது வைத்தார். நான் இளைஞரணித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தேன். கார்த்தி,"அப்பா வந்துடுவாங்க" என்றார். சற்று நேரம் கழித்து,"சாப்பிட்டுடலாம் அண்ணா" என்றார் கார்த்தி. கார்த்தி அம்மா இப்போது தட்டில், வறுத்த மீனை அடுக்கிக் கொண்டிருந்தார்.

"என்ன?" என்று கேட்டேன். "உங்களுக்கு தான் சாப்பாடு",என்றார் கார்த்தி. மறுக்கமுடியாமல் அமர்ந்தேன். சாப்பாட்டோடு அன்பை கலந்து பரிமாறினார் கார்த்தி அம்மா. சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கார்த்தி அப்பா வந்தார். அவரும் சேர்ந்து உபசரித்தார்.

சாப்பிட்டு முடித்து அமர்ந்தேன். அது அந்த வீட்டின் ஹால். பெரிய அளவிலான ஹால். கார்த்தி அப்பா சொன்னார்,  "அந்த காலத்தில் இது பழைய சுற்றுக்கட்டு வீடு.  இங்கு தான் முற்றம் இருந்தது. இது தான் மையம்". அவர் காட்டிய இடத்தைப் பார்த்தேன்.

"இந்த இடத்திற்கு  ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு முக்கியப் பிரமுகர் இங்கு வந்திருந்தார். அவரிடம் என் பெரியப்பா "இந்த முத்தத்தில் தான் நான் பொறந்தேனாம்" என சொன்னார். அவர் ,"எல்லோரும் முத்தத்தில் ஆரம்பித்து தான்யா பிறப்பார்கள். நீ மட்டும் தானா",என கேட்க, அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது.

அவரது பெரியப்பா, 'தஞ்சை பெரியார்' என்றழைக்கப்பட்ட மன்னை நாராயணசாமி. அந்த முக்கிய பிரமுகர், தலைவர் கலைஞர்.

#  கலைஞரின் தமிழ் முத்தம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக