பிரபலமான இடுகைகள்

திங்கள், 15 பிப்ரவரி, 2016

அரசியல் பேசுவோம்

அவ்வப்போது அலைபேசுவார் திரு. அவரது முழுப்பெயரான திருஞானசம்பந்தம் என்பதை விளிப்பது சிரமம் என்பதால் 'திரு' நண்பர்கள் வட்டாரத்தில். சொல்ல வரும் விஷயத்தை நிதானமாக, மென்மையாக சொல்வார். சற்று கூடுதல் நேரம் பேசுவார் என்பதால் அவர் போன் எடுக்க மற்றவர்கள் அலறுவார்கள்.

பொறியியல் படித்தவர். மெக்கானிக்கல் படித்திருந்தாலும், அய்.டி துறையில் பணிபுரிபவர். முதலில் விப்ரோவில் பணிபுரிந்தவர், இப்போது சிட்டி பேங்கில் பணி புரிகிறார். சென்னை அலுவலகத்தில், மானிட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தாலும், இவர் மனம் சோழங்குறிச்சி தெருக்களிலேயே இருக்கும். சோழன்குறிச்சி, இவரது சொந்த ஊர்.

கவிதை எழுதுவார். கவிஞர் மனது இளகியது என்பதற்கேற்ப தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யக் கூடியவர். அலுவலகத்தில் ஒரு நாள் வார ஓய்வு கிடைத்தால், சோழங்குறிச்சியில் நிற்பார். கலைந்த தலை, சிவந்தகண்கள் என வாரம் முழுதும் உழைத்த சோர்வோடு சுற்றி வருவார்.

திடீர் என அழைப்பார். "சார், இன்றைய நிலைத்தகவல்கள் நெகிழ வைத்து விட்டது", என அது பற்றி விவாதிப்பார்.  சில புதியவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி பேச வைப்பார். அதற்கு முன்,"சார், உங்களைப் பற்றி சொன்னேன். அவர்கள் நம்பவில்லை. தெரிந்துக் கொள்ளட்டும் என அழைத்து வருகிறேன்" என அறிவிப்பு கொடுப்பார்.

இவரது உறவினர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான். ஆனால் 2011 தேர்தலில் 49ஓ-விற்கு ஓட்டு போட்டவர். "உங்கள் முகநூல் நிலைத்தகவல்கள் பார்த்து தான் உங்களைப் பற்றி உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சந்திக்கிறேன்", என்றார். சில மாதங்களாக,"சார், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு இளைஞர் சந்திப்பு நடத்த விரும்புகிறேன்" என்றார்.

"நடத்துங்கள். நல்ல விஷயம் தானே", என்றேன். "நீங்க கலந்துக்கனும்",என்றார். "நான் வந்தா அரசியல் நிகழ்ச்சி ஆயிடுமே"என்றேன். "சட்டமன்ற உறுப்பினரா கலந்துக்குங்க. அரசியல் ஆகாது" என்றார். இன்று சோழங்குறிச்சி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

உடையார்பாளையம் பேரூராட்சியில் இருந்து 5 கி.மீ உள்ளடங்கிய அழகிய கிராமம், சோழங்குறிச்சி. ஒரு புளியந்தோப்பில் எளிமையாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை சென்று கலந்து கொண்டேன். ஒரு நல்ல நிகழ்ச்சியாக அமைந்தது.

பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் பணிபுரியும் பொறியியல் படித்தவர்களும், மற்றொரு கல்லூரியில் படிப்பவர்களும் கலந்து கொண்டனர். இரண்டு இளம் பெண்கள் கலந்து கொண்டது நிகழ்ச்சியின் வெற்றியை காட்டியது.

திருவும் அவரது நண்பர்களும் ஒரு வாரம் உழைத்து ஏற்பாடு செய்திருந்தனர். 300 அழைப்பிதழ்கள் கொடுத்து, 140 பேரை எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் வந்தவர்கள் 48 பேர். இதல்லாமல் மூத்தவர்கள் கொஞ்சம் பேர் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள், அழைக்காமலே.

நிகழ்ச்சி தலைப்பு "அரசியல் பேசுவோம்". எதிர்பாராத, எதிர்பார்த்த கேள்விகள் கணயாய் தொடுக்கப்பட்டன. சமாளித்து பதிலளித்தேன். உள்ளூர் அரசியலை விட இந்திய அரசியல் கூடுதலாக விவாதிக்கப்பட்டது.

# அரசியல் பேசினோம், அலசினோம் !

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக