பிரபலமான இடுகைகள்

புதன், 17 பிப்ரவரி, 2016

நல்லவர் களம் புகுவார்

அரசியல் பேசுவோம் (தொடர்ச்சி)

தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சியை துவங்கினார் திரு. "முதலில் அறிமுகப்படுத்திக் கொள்வோம். நான் சிவசங்கர். குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தேன்" என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இறுக்கம் தளர்ந்து அமர்ந்தார்கள்.

அவர்களும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கல்லூரியில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள், சட்டம் பயிலும் பெண், சுய தொழில் செய்பவர், டிரைவர், போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர் என பல தரப்பினரும் வந்திருந்தனர். 12.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 1.30 ஐ தாண்டியும் நீண்டது.

உரையாற்றாமல், கலந்துரையாடல் நிகழ்ச்சியாக கொண்டு சென்றோம்.

"அரசியல் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க?" என்று நான் கேட்டது தான் தாமதம். வரிசையாக மைக் பிடித்தனர். கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்யறது, பதவிக்கு அலையறது என ஒவ்வொருவரும் ஒரு டெபனிஷன் கொடுத்தார்கள். இளைய தலைமுறைக்கு அரசியல் மீதான வெறுப்பு வெளிப்பட்டது.

ஒரு இளைஞரை கேட்டேன்,"உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?". "விக்ரம்". "வேறு நடிகர் படத்துக்கு போகனும்னு நினைக்கிற உங்க நண்பர்களை, விக்ரம் படத்துக்கு அழைத்து செல்ல எப்படி பேசுவீங்க?". "கருத்துள்ள படமா இருக்கும், நடிப்பு நல்லா இருக்கும்னு சொல்லி கூப்பிடுவேன்"என்றார்.

"இது தான் அரசியல். உங்களுக்கு சரி என்று தோன்றுவதை நோக்கி மற்றவர்களை இழுத்து செல்வது தான் அரசியல். அரசியல்னா பெருசா ஏதோன்னு நினைக்காதீங்க. அப்பாகிட்ட வேல ஆகனும்னா அம்மா மூலம் கன்வீன்ஸ் செய்யறதே அரசியல் தான். சமூகத்தில் நல்லது நடக்கனும்னா, அதற்கு மற்றவர்களை தயார் படுத்துங்க. அது தான் அரசியல்", என்றேன்.

இப்போது சிலர் பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. முழுதும் அவநம்பிக்கையாய் சிலர் வந்திருந்தார்கள். சிலர் என்ன தான் நடக்கிறது என பார்க்க வந்திருப்பார்கள் போலும். சிலர் தயாரிப்போடு வந்திருந்தார்கள். டிவி நிகழ்ச்சிகள் போல், கேள்வி கணையால் துளைத்தார்கள்.

"அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் ஆலைகளில் ஏன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதில்லை?, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் என்ன ஆனது? நிலத்தடி நீரை பாதிக்கும் யுகலிப்டஸ் மரத்தை ஏன் தடை செய்யக் கூடாது?" என்பது போன்ற உள்ளூர் பிரச்சினைகள் இடம் பிடித்தது.

"கூடங்குளம் பிரச்சினையில் ஏன் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையா?, மீத்தேன் திட்டத்தை தடுக்க முடியாதா, மதுவிலக்கை அமல்படுத்த ஏன் அரசு தயங்குகிறது?, ஸ்டிக்கர் அரசியலை நிறுத்த முடியாதா?, தமிழகத்திற்கு இலவசங்கள் தேவையா? என தமிழகப் பிரச்சினையை பட்டியல் இட்டார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பது தவறான கருத்து என வெளிப்படுகிறது. காது கொடுக்க ஆள் இருந்தால், கருத்து சொல்ல தயாராக இருக்கிறார்கள். களமும் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாழ்வின் சுமை அமுக்குவதால் பலர் நேரம் ஒதுக்க இயலாமல் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை நடத்திய திரு, துவக்கி வைத்து விட்டு கடைசி வரிசையில் உட்கார்ந்தவர் நன்றி சொல்ல தான் எழுந்தார். நிகழ்ச்சியின் வெற்றியே நோக்காய் இருந்தார்.

"ஊழலை ஒழிக்க முடியாதா?"
"உள்ளாட்சித் தேர்தல் போது, நிற்கிற அத்தனை வேட்பாளர்களும் செலவு செய்கிறார்கள். சிறு கிராமத்திலேயே கோடிக் கணக்கில் செலவாகிறது. செலவு செய்தவர்கள் அதை மீட்க ஊழல் செய்கிறார்கள். உங்களை சுற்றி உள்ளவர்களிடம், நல்லவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அங்கிருந்து துவங்குங்கள். மாற்றத்தை நம்மிடம் இருந்தே துவங்குங்கள். நீங்களும் அரசியல்வாதி தான். நல்ல அரசியல் செய்யுங்கள்" என்று முடித்தேன்.

# நல்லவர் பலர் களம் புகுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக