பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அண்ணா போல் வாழ வேண்டும்

இரவு பத்து மணி. அறைக் கதவு மூடப்படுகிறது. அறைக்கு வெளியே ஒரு பையனை நிறுத்தியிருந்தார் மெய்யப்பன். அவன், அறைக்கு உள்ளே இருந்தவருக்கு ஏதேனும் தேவைப்பட்டால் உதவுவதற்காக நிறுத்தப்பட்டவன். ஆனால் காலையில் தான் அறைக் கதவு திறந்தது.

ஆனால் உள்ளே இருந்தவர் இரவே சொல்லி இருந்தார்,"எனக்கு ஒரு செம்பில் தண்ணீர், டம்ளர், வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை கொண்டு வாருங்கள். பாயும், உட்கார்ந்து எழுதத்  தரையில் வைத்து எழுதும் மேசையும் கொடுத்து விடுங்கள். நீங்கள் யாரும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம்.

இந்தக் கதையை எழுதி முடித்து விட்டுக் காலையில் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். நான் காலையில் கொஞ்சம் லேட்டாகத் தான் எழுந்திருப்பேன். அப்பொழுது என்னை வந்து சந்தித்தால் போதும்" என்று சொன்னார். அதே போலவே யாருக்கும் தொந்தரவு இல்லை, திரைக்கதை தயாராக இருந்தது.

அவர் ஒரு திரைக்கதை வசனகர்த்தா தான். ஆனால் வித்தியாசமான, யதார்த்தமான மனிதர். அதனால் தான் சிறிதும் பந்தா பண்ணாமல், தனியே அமர்ந்து எழுதினார். தான் சொன்னது போலவே, ஓர் இரவில் ஒரு கதையை எழுதிக் கொடுத்தார்.

சுமார் 500 பக்கம் ஓர் அடித்தல், திருத்தல் இல்லாமல் 'ஓர் இரவு' கதையை சினிமாவுக்கு வேண்டிய முறையில் எழுதி முடித்து விட்டார். ஒரே இரவில், 500 பக்கத் திரைக்கதையை எழுதி முடிக்கும் திறமை அவர் ஒருவருக்கே என திரையுலகமே வியந்து பாராட்டியது.

அவர் தான் அண்ணா. அவர் ஒரு மாமேதை. அவரைப் பற்றி பல செய்திகள் அறிந்திருப்போம். ஆனால், ஒரு இரவில் ஒரு திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதிய அதிசய மனிதர் என்ற செய்தி இன்றைய திரையுலகினருக்கு அதிர்ச்சித் தரக் கூடியது.

வெளிநாடு அல்லது உள்நாட்டில் மாதக் கணக்கில் அறை போட்டு, கூட்டம் கூட்டி விவாதித்து கதை தயார் செய்கிற காலம் இது. அதனால் அண்ணா குறித்த செய்தி அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது செய்தி.

அரசியல் ரீதியாக, அண்ணாவைப் பாராட்டப் பல செய்திகள் உண்டு. இலக்கிய ரீதியாக வியக்க பலத் தகவல்கள் உண்டு. எளிமைக்கு இலக்கணமே அவர் தான். இப்படி நம்மை வியக்க வைக்கிற ஆளுமையாக வாழ்ந்து காட்டிவிட்டவர் அண்ணா.

அவர் தம் 47வது நினைவு நாள். அவர் நினைவுகளோடு வாழ்வோர் இயற்கையாய் உயர்வார்கள்.

# அண்ணா போல் வாழ வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக