பிரபலமான இடுகைகள்

சனி, 30 ஜனவரி, 2016

ஒரு பாலத்தின் கதை - 1

"ஏன் சங்கர் அது உங்க தொகுதியும் இல்ல. அதிமுக எம்.எல்.ஏ தொகுதி. அந்த ஊருக்கு இவ்வளவு பெரிய பாலம் கேக்கறீங்களே?". இது நான் எதிர்பார்த்த கேள்வி தான். அதனால் பதிலோடு தயாராகத் தான் இருந்தேன். கேட்டவர் அன்றைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

அது 2007 ஆம் ஆண்டு. நான் ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர். நான் கேட்ட பாலம் " கொள்ளிடம் ஆற்றின் மேல், நீலத்தநல்லூர் - மதனத்தூர் பாலம்". நீலத்தநல்லூர் தஞ்சை மாவட்டப் பகுதி. மதனத்தூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியை சேர்ந்தது.

"இந்தப் பாலம் வந்தால் ஜெயங்கொண்டம்  தொகுதிக்கு மட்டும் இல்ல அண்ணா, மொத்த அரியலூர் மாவட்டத்துக்கே பயன்படும். இப்போ நாங்க கும்பகோணம் போகனும்னா ஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரை வழியா போறோம். இந்தப் பாலம் கட்டுனா 20 கிலோமீட்டர் மிச்சமாகும்.

அரியலூருல இருந்து கும்பகோணம் போக, திருவையாறு போய் போகனும். அவங்களுக்கும் இதனால் தூரம் குறையும். இது ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் 40 ஆண்டுகால கனவு".

"அப்படியா அவ்வளவு கால கோரிக்கையா?"

"மறைந்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ அண்ணன் க.சொ.கணேசனின் நீண்ட நாள் கோரிக்கை. சட்டமன்றத்தில் பல முறை இது குறித்துப் பேசி இருக்கிறார். அதே போல கொள்ளிடத்தின் அக்கரை தஞ்சை மாவட்டம்.

அந்த மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அண்ணன் கோ.சி.மணி அவர்களும் இது குறித்து ஏற்கனவே கடந்த ஆட்சியில் முயற்சி எடுத்திருக்கிறார். இப்போது உடல் நலம் சரியாக இருந்திருந்தால் உங்களை விட்டிருக்கமாட்டார்" என்றேன்.

"நீங்க சொல்லறத பார்த்தா முக்கியம் தான் போலருக்கே"

"ஆமாம் அண்ணா. இது மட்டுமில்லாம 1996ல் இது குறித்து நான்கு  எம்.எல்.ஏக்கள் ஒருங்கிணைந்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் குத்தாலம் தொகுதி ச.ம.உ கல்யாணம், ஜெயங்கொண்டம் தொகுதி ச.ம.உ க.சொ.கணேசன், திருவிடைமருதூர் ச.ம.உ இராமலிங்கம், பாபநாசம் தொகுதி கருப்பண்ண உடையார்.

கேள்வி எழுப்பி பேசிய அண்ணன் குத்தாலம் கல்யாணம்,"இந்தப் பாலம் அமைந்தால், கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் தூரம் குறையும். நான்கு எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி பரிந்துரையும் உண்டு" என சொல்ல..

அப்போது பதிலளித்த அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், நான்கு எம்.எல்.ஏக்களும் அமைச்சரும் இணைந்து கோரிக்கை எழுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பதில் அளித்திருக்கிறார். அவ்வளவு தொடர் முயற்சிகள் இந்தப் பாலத்திற்கு எடுக்கப்பட்டிருக்கு அண்ணா" என்றேன்.

எனது நீண்ட பதிலை கேட்ட அண்ணன் சாமிநாதன் திரும்பி சீனியர் பி.ஏவை பார்த்தார். "அந்த மேப்பை எடுத்துட்டு வாங்க" என்றார்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக