பிரபலமான இடுகைகள்

திங்கள், 25 ஜனவரி, 2016

தாய்மொழி காக்க...

பெங்களுருவில் 2012ம் ஆண்டு டிசம்பரில் நடைப்பெற்ற எம்.எல்.ஏக்கள் பயிற்சி பட்டறையில் பல மாநிலங்களில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டிச்சேரியில் இருந்து கிட்டத்தட்ட பத்து எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமிழகத்தில் இருந்து அய்ந்து பேர் கலந்து கொண்டோம்.

வகுப்பெடுத்த பேராசிரியர்கள் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசினர். ஒரு சிலர் இந்தியை கலந்து பேசினர். வட இந்தியாவில் இருந்து வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று காரணம் கூறினர்.

ஒருவர் முழுவதுமாக இந்தியிலேயே உரையாற்றிட முயன்றார். அப்போது பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்களிடம் இருந்தும், தமிழகத்தை சேர்ந்த எங்களிடமும் இருந்து எதிர்குரல் கிளம்பியது. எங்களை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

"ஆங்கிலமே சுத்தமாக தெரியாதவர்கள் இருக்கிறார்கள்" என்று  சால்ஜாப்பு சொல்லிப் பார்த்தார்கள். "அதே போல நாங்கள் இந்தியே தெரியாதவர்கள் இருக்கிறோம்" என்று கூறினோம்.  ஒரு வழியாக ஆங்கிலத்திலேயே வகுப்பு நடக்கும் என்று முடிவானது.

இதுவே அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் காட்சி வேறு விதமாக இருந்தது. டெல்லியில் வகுப்பு எடுத்தவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலோர். அதனால் "ஹிந்தி" கொஞ்சம் முண்டியது.

ஆங்கிலம், இந்தி இரண்டையும் கலந்தே பேசினார்கள். அங்கேயும் ஒருவர் முழு இந்திக்கு தாவினார். அப்போதும் ஒரு எதிர் குரல் முதலில் ஒலித்தது. அதற்கு பல குரல்கள் ஆதரவாக ஒலித்தன.

ஒருவர் "ராஷ்டிரிய பாஷா இந்தி. அதிலேயே வகுப்பு நடத்தலாம்" என்று வாதிட்டார். முதல் குரல் கொடுத்தவர் எழுந்து "இந்தி ராஷடிரிய பாஷை கிடையாது. இந்தியாவில் இருக்கும் எல்லோரும் இந்தி பேசுபவர்கள் அல்ல" என்றார். குரல் கொடுத்தவர் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல, தென்னிந்தியாவை சேர்ந்தவரும் அல்ல.

அவர் ஹரியானாவை சேர்ந்தவர். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. காரணம் தமிழகத்தை சேர்ந்த நமக்கு, வட இந்தியர்கள் என்றால் இந்தி வெறியர்கள் என்று பொது எண்ணம். அப்போது அவர்  மேலும் சொன்னார்," எங்கள் தாய் மொழி ஹரியாண்வி. இந்தி மேலாதிக்கத்தால் என் மொழி அழிந்துக் கொண்டிருக்கிறது".

இதற்கு ஆதரவான குரல் குஜராத்தில் இருந்தும் வந்தது. ஆமாம் பிரதமர் மோடியின் குஜராத்தில் இருந்து தான். அவரும் இதே கருத்தை சொன்னார். இந்தி தேசத்தில் இருந்தே இந்த உணர்வு குரல்கள் எழுந்தது. பிறகு தென்னிந்தியாவை சேர்ந்தவர்களும் குரல் கொடுக்க, ஹிந்தி பின் வாங்கியது.

இந்த உணர்வை கடந்த ஆண்டு முகநூலில் கண்டேன். மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தூக்கிப் பிடிக்க, திணிக்க முயற்சித்த போது திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து மாத்திரமில்லாமல் கட்சிசார்பற்ற இளைஞர்களிடம் இருந்தும் எதிர்குரல் எழுந்தது.

நணபர் ஒருவர் என்னை ஒரு குழுவில் இணைத்தார். அதில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவை சேர்ந்த பலரும் இந்தி மேலாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர். இது தொடர் போராட்டம். நாம் விழித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தாய்மொழி கொல்லக் காத்திருக்கும் கும்பல் முன்னேறி விடும்.

எம் மண்ணின் மைந்தர், மொழிப் போர் வீரர் கீழப்பழூர் சின்னசாமி தன் தேகத்திற்கு தீ வைத்துக் கொண்டு துவங்கிய போராட்டம் இது.

# அந்தத் தீ இன்னும் கொழுந்து விட்டு எரிகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக