பிரபலமான இடுகைகள்

சனி, 26 அக்டோபர், 2013

இரண்டு அரசு ஐ.டி.ஐக்கும் அனுமதி, ஒரு கார் பயணம் தான்.

தலைவர் கலைஞர் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார், தலைமைச் செயலகம் நோக்கி. அப்போது தலைவர் கலைஞர் முதல்வர். உடன் சில அமைச்சர்கள். அண்ணன் ஆ.ராசா அவர்களும் உடன்.

"ப.சிதம்பரமும், பெரிய.கருப்பனும் சிவகங்கைக்கு ஒரு ஐ.டி.ஐ கேட்டிருக்காங்க. அலுவலகத்தில நினைவு படுத்துங்க" என தன் செயலாளரிடம் சொல்கிறார் தலைவர். உடனே அண்ணன் ராசா, "அய்யா எங்களுடையதும் பின் தங்கிய மாவட்டம், எங்களுக்கும் ஐ.டி.ஐ வேண்டும்" என்கிறார்.

"ஏற்கனவே அரியலூர்ல ஒரு அரசு ஐ.டி.ஐ இருக்கேய்யா" என்கிறார் தலைவர் கலைஞர். "அய்யா, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் வருவதற்குள் அந்த பகுதி மாணவர்களை தொழிற்கல்விக்கு தயார் செய்தா தான் சரியா இருக்கும். அதே போல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்குள் அங்கே இருக்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்"

"சரி. நீ சொல்ற காரணம் சரியா தான் இருக்குய்யா. ரெண்டும் கொடுத்திடலாம்." இது தலைவர் கலைஞர். தலைமை செயலகம் அடைவதற்குள் இரண்டு ஐ.டி.ஐக்கும் அனுமதி. ஒரு கார் பயணம் தான். இரண்டு ஐ.டி.ஐ-களும் அமைவதற்கு அரசு இடம் இல்லை. தன் தாய்-தந்தையர் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் தலா அய்ந்து ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்த ஒரு சந்தர்ப்பம். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நேரம். அண்ணன் ராசா அரியலூருக்கு ஒரு பொறியியல் கல்லூரி கேட்டார். மற்ற அமைச்சர்கள் "ஏற்கனவே இரண்டு ஐ.டி.ஐ, ஒரு கலைக்கல்லூரி(பெரம்பலூர்), இது வேறயா ?" எனக் கிண்டலடித்தனர்.

"நீங்க சும்மா தர வேண்டாம். 20 ஏக்கர் இடமும், 5 கோடி ரூபாய் பணமும் நிதியாகப் பெற்று தருகிறேன்" என சொல்ல, பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. 20 ஏக்கர் இடமும், நிதியும் வழங்கினார். அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

அண்ணன் ராசா அவர்கள் ஒரு முறை துறையூர் அருகே மிகப் பெரிய விபத்தை சந்தித்தார். திருச்சியில் முதல் உதவி முடித்து, தனி ஹெலிக்காப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

இது குறித்து ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, "என்னை நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டதால் பிழைத்து வந்தேன். ஆனால் எங்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால், தஞ்சையோ, திருச்சியோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது."

"ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து கொடுத்தால், அரியலூர்-பெரம்பலூர் இடையே அமைத்துக் கொள்வோம். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும். எங்கள் மாவட்டத்து கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்" என சொல்ல மருத்துவக் கல்லூரி sanctioned. 

இப்படி இடம், பொருள் அறிந்து அண்ணன் ஆ.ராசா அவர்கள் முயற்சி எடுத்ததனால் தான் எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியே. இன்று அண்ணனின் பிறந்தநாள்.

# வாழ்க அண்ணன், எங்கள் மாவட்டங்களை இன்னும் முன்னேற்ற !




செவ்வாய், 22 அக்டோபர், 2013

பாலாவுக்கு பிறந்தநாள்

நேற்று பாலாவுக்கு பிறந்தநாள். முகநூல் டைம்லைனில் வாழ்த்துக்கள் பார்த்தேன்.

பாலமுருகன், நண்பர்கள் எங்களுக்கு பாலா. பாலா எதிலும் தனித்துவம். அது பெயரிலேயே ஆரம்பித்துவிடும். மற்றவர்கள் Bala Murugan, ஆனால் பாலா Bala Muru'k'an.

பெயரில் மட்டுமல்ல, அனைத்திலும் அப்படி தான். உடுத்தும் உடையில் அப்படி ஒரு நேர்த்தி இருக்கும், கல்லூரி காலத்திலேயே. உடலோடு பொருந்திய கச்சிதமான அளவு. நீட்டாக டக் இன் செய்த பேண்ட், சர்ட். சுத்தமாக, கசங்காமல். இதே போல் தான் எதுவும்.



தான் தங்கியிருக்கும் அறை. படிக்கும் புத்தகம். தான் பயன்படுத்தும் வாகனம். அடுத்தவர்களோடு பேசுவது, பழகுவது. உணவு உண்ணுவது. எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். கல்லூரி காலத்திலேயே பெரியவர்களுக்கான முதிர்ச்சி இருக்கும்.

கிராமத்திலிருந்து சென்னை வந்து உழைத்து தொழிலதிபரான தந்தை. அதை உணர்ந்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எளிமையான மகன். கொங்குக்கே உரிய உழைப்பு. இப்படி மற்றவர்கள் கவனிக்கத் தக்க ஒரு நபர் பாலா.

பாலா எனக்கு கல்லூரித் தோழன். மூன்று ஆண்டுகள் அறை நண்பன். ஜூனியராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் வகுப்புத் தோழர்கள் போலவே இருப்போம். நாங்கள் ஊர் சுற்றும் கேங். பாலா தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் மாணவன்.

அண்ணாமலைநகரிலிருந்து மாரியப்பநகர் செல்லும் சாலையில் சிறு ஹோட்டல். உணவருந்த சென்றிருந்தோம். பாலா இலைக்கு முதலில் முட்டைப் பொறியல் வந்து விட்டது. அப்போது பாலாவுக்கு பிடித்த அய்ட்டம். கல்லூரி கால பழக்கப்படி நானும், இன்னொரு நண்பனும் பொறியலில் கை வைத்தோம். பாலா பெர்பெக்ட் ஆயிற்றே. "ஒரு நிமிடத்தில் உங்களுக்கு வராதா?" எனக் கேட்க, எனக்கு கோபம். இரண்டு நாள் பேசவில்லை.

இரண்டு நாள் பொறுத்த பாலா மூன்றாவது நாள், "சிவா, ஒரு வேலை இருக்கு. வாங்க" என அழைக்க சென்றோம். ஒரு முட்டை பொறியல் வாங்கி மூன்று பேரும் சாப்பிட்டோம். "இது தான் வேலை" என பாலா சிரிக்க, அந்த கள்ளமில்லா சிரிப்பில் கோபம் கரைந்தது.

கல்லூரி முடிந்த அடுத்த வருடத்திலேயே பாலாவுக்கு திருமணம். தொழிலில் தீவிரம். இரண்டு பெண் குழந்தைகள் என வாழ்க்கை வேகமாக ஓடியது. அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வோம்.

பாலாவின் மகள் அபரஞ்சிதா ஸ்குவாஷ் விளையாட்டில் டாப். மகளின் ஒவ்வொரு வெற்றியையும், முன்னேற்றத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். சர்வதேச ஆட்டங்களில் அபரஞ்சிதா பங்கேற்றது, வெற்றி பெற்றது பாலாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பாசமிகு தந்தை.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு ரிலாக்சாக ஒரு வெளிநாடு பயணம் மேற் கொண்டார். ஆழ்கடல் ஆழ்ந்து விளையாடும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்டார், படகில் மனைவியும் மகளும் இருக்க. நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. தேடினால் உடல் தான் கிடைத்தது. ஆழ்கடல் அழுத்தத்தில் இதயம் நின்றுவிட்டது. குடும்பம் துயரக் கடலில்.

ஓராண்டு கடந்து விட்டது. பாலா இன்னும் இருப்பதாகவே மனது நினைக்கிறது. பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களும் அப்படி நினைத்து தான் வாழ்த்தியிருப்பார்கள்.

# முட்டைப் பொறியல் இருக்கிறது. சாப்பிட வருவாயா பாலா ?
 — withBala Murukan P.

திங்கள், 21 அக்டோபர், 2013

பொதுவாழ்வின் சங்கடங்கள்

செந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். பேசிய அண்ணன் அவர்களது முகத்தில் லேசான மாற்றம். "அலுவலகத்தில் இருக்கிறேன், காரில் ஏறி பேசுகிறேன்." என்றார்.

தளபதி அவர்களின் 06- ந் தேதி வருகையையொட்டி, அரியலூர் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை அண்ணன் ஆ.ராசா அவர்கள் 04.10.2013 அன்று பார்வையிட்டு விட்டு விழுப்பணங்குறிச்சி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மறைந்த செந்தில் அவர்கள் படத்தினை திறந்து வைத்து விட்டு, திருமானூரில் கழகத் தோழர் சுந்தர சக்திவேல் திருமணத்தை விசாரித்து செந்துறை விரைந்தோம்.

செந்துறையில் வி.சி.க மாவட்ட செயளாலர் திருமாவளவன் மறைவிற்கு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, ஒன்றிய தி.மு.க அலுவலகத்திற்கு சென்றோம். கடந்த மாதம் காதணி விழா கண்ட கருப்புசாமி அவர்களது குழந்தைகள் அண்ணன் ராசா அவர்களிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது தான் அந்த போன் அழைப்பு வந்தது. ஃபோனை வைத்த உடன் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்தனர். தொடர்ந்து குழுமூர் கழகத் தோழர் ராஜேந்திரன் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். டீ வந்தது, அருந்தி விட்டு கார் ஏறினோம்.

மொபைலை எடுத்து டெல்லிக்கு அழைத்தார், "பாப்பா எப்படி இருக்கு ?, ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு பேசுங்க" என்றார். அண்ணன் ராசா அவர்களுக்கு ஒரே மகள். டெல்லியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு சென்றிருக்கிறார். நாட்டிய வகுப்பு. பயிற்சியில் இருக்கும் போது, திடீரென சீலிங் ஃபேன் கழன்று அவரது தலையில் விழுந்து விட்டது. பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

இங்கே அகரம் சீகூரில் ஒரு திருமணம் விசாரித்து, ஆடுதுறை மு.ஊ.ம தலைவர் மலர்வண்ணன் தந்தை மறைவு துக்கம் விசாரித்து விட்டு கார் ஏறினோம். டெல்லியில் இருந்து பார்லிமெண்ட் அனெக்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

வடக்கலூரில் ஒரு புதுமணத் தம்பதியரை வாழ்த்திவிட்டு, மூத்தக் கழகத் தோழரின் மனைவி மறைந்ததையொட்டி அவரது படத்தை திறந்து வைத்து விட்டு, லப்பைகுடிகாடு நகரில் மூன்று துக்கம் விசாரித்துவிட்டு, கீழப்புலியூரில் கழகத் தோழரின் புதுமனைபுகுவிழாவில் கலந்து கொண்டு பெரம்பலூர் செல்லும் போது மாலை மணி 4.00.

அலுவலகம் சென்று அண்ணியாருக்கு ஃபோன் செய்து விபரம் கேட்டார். அப்போது தான் மருத்துவமனையில் ஆய்வுகள் முடிந்து வெளியே வந்திருந்தனர். தலையில் வெளிப்புற வீக்கம் தவிர வேறு பாதிப்புகள் இல்லை என்று தெரிந்த பிறகே சகஜமானார். மகளிடம் பேசினார், அதன் பிறகே அண்ணனுக்கு முகம் மலர்ச்சியான நிலைக்கு வந்தது. மிகப் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

காரில் வந்த நான்கு பேரை தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. அண்ணனும் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சிகளை முடிக்கும் வரை இயல்பாகவே இருந்தார். தனது வருத்தம் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்.

உணவருந்தி மலையாளப்பட்டி பயிற்சி பாசறை ஏற்பாடுகளை காண சென்றோம். 5-ந் தேதியும் இதே போன்று ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். 6-ந் தேதி தளபதி அவர்களோடு பெரம்பலூர்-அரியலூர் சுற்றுப்பயணம் பொதுக்கூட்டம் முடித்து, தளபதி அவர்களோடு இரவு சென்னை சென்று, நேற்று தான் டெல்லி சென்று மகளை பார்த்தார்.

# பொதுவாழ்வின் சங்கடங்கள்



பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் - தளபதி கடிதம்

நாம ஒரு நிலைத்தகவல் யோசித்து வைத்திருக்கும் போது, அத வேறு ஒருவர் பதிவு செய்தா எப்படி இருக்கும். அப்படி தளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பயிற்சி பாசறை மற்றும் அரியலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் குறித்து கட்டுரை தயார் செய்ய யோசித்திருந்தேன்.

நேற்று காலை சென்னை பதிப்பு முரசொலியில் அப்படியே கடிதமாக வந்திருந்தது. ஆம், தளபதி அவர்கள் உங்களில் ஒருவன் என்று தொடர்ந்து எழுதி வரும் கடித வரிசையில் " நமது பயணமும் தொடர வேண்டும்" என்ற தலைப்பில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

அதைத் தாண்டி மிகுதியாக சொல்ல ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு நுணுக்கமாக நிகழ்ச்சி குறித்து விவரித்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய செய்தி, அவரது உழைப்பு.



ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சுழலும் சூரியன் - நேரடி அனுபவம்

5-ம் தேதி மாலையே தளபதி அவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வந்து தங்கி விடுவதாக திட்டமிடப் பட்டிருந்தது. பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலையில், அதை முடித்து இரவு 10.30 மலைக்கோட்டை விரைவு ரயிலில் எழும்புரிலிருந்து கிளம்பினார்கள்.

விடியற்காலை 3 மணிக்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. 

                          DSC08280.JPG

அரியலூர் ரயில் நிலையத்தில் கழகத் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். அப்போது 4.45 ஆகியிருக்கும்.

காலை பணிகள் முடித்து, உணவருந்தி, காலை 08.30 மணிக்கு காரில் ஏறிவிட்டார். வழி நெடுக வரவேற்பை ஏற்றுக் கொண்டு மலையாளப்பட்டியை அடையும் போது 09.45.

                         

 அங்கு கழகக் கொடியேற்றி விட்டு மேடைக்கு வந்த போது மணி 10.00. நண்பகல் 12.30 வரை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் நிகழ்வை கவனித்தார் தளபதி. ( அதற்குள் நான் 4 தடவை எழுந்து மேடையிலேயே உலாத்திவிட்டேன்).

இரண்டு கி.மீ தள்ளியிருந்த தங்கும் இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு கழக கொடியை ஏற்றி வைத்து விட்டு சரியாக இரண்டு மணிக்கு மேடைக்கு வந்து விட்டார். மாலை 4.30 வரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கலந்து கொண்ட 750 இளைஞரணி தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார், 50 தொண்டரணி தோழர்களுக்கும் வழங்கினார். 
                                  

மணி 5.45, மலையாளப்பட்டியிலிருந்து கிளம்பினார்.வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டு பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகம் வந்த போது மணி 7.00. 

                               

குளித்து உடைமாற்றி கிளம்பும் போது மணி 07.30. வழியில் வரவேற்புகளை ஏற்று அரியலூர் மேடை ஏறிய போது 08.15. 

                                                                 
                                                               
                                                                             
                              

தளபதி அவர்கள் பேச ஆரம்பித்தப்போது மணி 08.45. ஒரு மணி நேரம் பேசினார்கள். அரியலூரிலிருந்து கிளம்பும் போது மணி 09.55. கார் பயணம். வழியில் உணவருந்தி சென்னை சென்றடைய எப்படியும் நள்ளிரவு 02.30 ஆகியிருக்கும். 

15 நாள் அலைச்சலில் அசந்து நான் தாமதமாக எழுந்து, கூட்டம் குறித்த செய்திக்காக நாளிதழ்களை டீ'யோடு புரட்டியப் போது மணி காலை 9.00. மொபைல் அழைத்தது. 

"என்ன சிவசங்கர், களைப்பு நீங்கி எழுந்தாச்சா ? கூட்டம் சிறப்பு" அழைத்தவர் தளபதி தான், வேறு யார் !

# கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.... உழைப்புன்னா தளபதி தான்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தூக்கணாங் குருவி கூடுகள், பாடித் திரியும் பறவைகள் - கெடாத இயற்கை....

மலையாளப்பட்டி.

நல்லக் காரணப் பெயர். மலையை ஆள்பவர்கள் அந்தப் பட்டியில் இருக்கிறார்களா அல்லது மலை அந்தப் பட்டியை ஆள்கிறதா தெரியவில்லை. ஆனால் முப்புறமும் மலைகள் சூழ்ந்துள்ள அந்த ஊரை கண்டவுடன், அது நம் மனதை ஆளும் பட்டியாகி விடுகிறது. 

06.10.2013 அன்று இளைஞர் அணி பயிற்சி பாசறை நடைபெற்ற ஊர். பாசறை நடத்த வேண்டும் என்று சொன்ன அடுத்த நிமிடம் அண்ணன் ராசா அவர்கள் மனதில் தோன்றிய ஊர் இது தான்.


                          

பெரம்பலுரிலிருந்து தலைவாசல், ஆத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால் வேப்பந்தட்டையை தாண்டி கிருஷ்ணாபுரத்தில் இடது புறம் திரும்பி மலையாளப்பட்டி செல்ல வேண்டும். சமதரையில் செல்லும் போதே மலைகள் கண்ணில் பட ஆரம்பிக்கும்.

அந்த ஊருக்கு சென்றவுடன் உடன் வந்தவர்களுக்கு நம் பகுதியில் இப்படி ஒரு இயற்கை வளம் கொஞ்சும் ஊரா என்ற எண்ணம் தான் ஏற்பட்டது. பெரம்பலூர் பகுதியில் இருக்கும் மலைகள் மரங்கள் இல்லாமல் வறண்டு இருக்கும். ஆனால் இங்கு எங்கு திரும்பினாலும் பசுமை. மலை மீது காட்டு மரங்கள். அரசுக்கு சொந்தமான பகுதி.

மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு, பாக்குத் தோப்பு என விரிகிறது காட்சி. சமீபத்தில் இங்கு தான் அதிக பட்டாம்பூச்சிகளை பார்த்தேன். இயற்கை சூழல் கெடாமல் இருக்கிறது. மக்கள் வாழ்க்கை முறையும் கெடாமல் இருக்கிறது. வயல்களுக்கு நடுவே வீடு கட்டி வசிக்கிறார்கள்.

வயலில் திரியும் நாட்டுக் கோழிகள் கால்கள் நீண்டு இயற்கையாக இருக்கின்றன. அவை வசிப்பதற்கு நான்கு தூண்கள் நட்டு அவை மேல் கோழி வீடு. இது சிறு வயதில் கிராமங்களில் பார்த்தது. இங்கு தான் மிச்சம் இருக்கின்றன.

மின்சார கம்பிகளில் தூக்கணாங் குருவி கூடுகள். பாடித் திரியும் பறவைகள். மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம் என விவசாயம் உயிரோடு இருக்கிறது. மலையடி வாரத்தில் முயல்கள், காட்டுப் பன்றிகள் தொந்தரவும் விவசாயிகளுக்கு உண்டு.

                             

ஆழமான கிணறுகள் வெட்டி, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து தான் விவசாயம். ஆனாலும் உழைப்பால் விளைவிக்கிறார்கள். நல்ல உழைப்பாளிகள் இந்த மக்கள்.

பாசறைக் கூட்டம் நடைபெற்ற இடம் மூன்று புறம் மலைகள் சூழ்ந்து இயறகை எழில் பொங்கி வழியும் இடம். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் என்றும் இந்த ஊர் நினைவில் இருக்கும். இடம் நல்ல தேர்வு.


                             

# என்றும் மலையாளப்பட்டி மலை மனதை ஆளும்...

திங்கள், 14 அக்டோபர், 2013

கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை செய்வதை விட.....

அமெரிக்க அதிபர் ஒபாமா தான் உலகின் உச்சபட்ச விருந்தினராக இருக்க முடியும். அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரத்தின் பிரதிநிதியாக இன்றும் பார்க்கப்படுபவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். உலகின் பெரும்பான்மையோரால் அறியப்பட்ட தொழிலதிபர் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸாக இருப்பார். உலகின் அதிக புகழ் வாய்ந்த நடிகராக டாம் க்ரூய்ஸ் இருப்பார்.

இந்த வரிசை அதிகாரம் வாய்ந்தவர்கள், ராஜ குடும்பம், தொழிலதிபர்கள், நடிகர்கள், தர்மம் செய்பவர்களுக்கு என இருக்கும். இது எதுவும் இல்லாமல் ஒருவர் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒபாமாவாலேயே விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

                           Malala Yousafzai: President Barack Obama, First Lady Michelle Obama, and their daughter Malia meet with Malala Yousafzai, the young Pakistani schoolgirl who was shot in the head by the Taliban a year ago, in the Oval Office: Malala Yousafzai meets the Obamas at the White House


                      

"டைம்ஸ்" பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றார். இங்கிலாந்து ராணியால் உபசரிக்கப்பட்டார். அய். நா.சபையில் உரையாற்றினார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் கிடைக்கவில்லை.


                         


இத்தனையும் 16 வயதில். ஆனால் அதற்கான விலை பெரிது. 

அவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்வாட் ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளான தலிபான்கள் கையில் இருந்தது. அப்போது பெண்கள் படிக்கக்கூடாது என அவர்கள் கட்டளைப் பிறப்பித்தனர். அது மலாலாவின் மனதை பாதித்தது. மலாலா பி.பி.சிக்கு ஒரு கட்டுரை எழுதினார், தலிபான் ஆதிக்கம் தம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் பெண் கல்வி குறித்தும். அது 2009, மலாலாவுக்கு 11 வயது.

நியுயார்க் டைம்ஸ் மலாலா குறித்து ஒரு குறும்படம் எடுத்தது. பாகிஸ்தானில் மெல்ல பிரபலமானார் மலாலா. இது தலிபான்களை எரிச்சலூட்டியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ராணுவம் ஸ்வாட் பகுதியை தன் கைக்கு கொண்டு வந்திருந்தது. மலாலாவின் பேட்டிகள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெற்று வந்தது.

பதினைந்தாவது பிறந்தநாள் கொண்டாடி மூன்று மாதம் ஆகியிருந்தது. அப்போதெல்லாம் அவருக்கும் அவர் தந்தைக்கும் தலிபான்களிடமிருந்து எச்சரிக்கை வந்துக் கொண்டிருந்த நேரம். எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம் என உடன் இருந்தோரே எச்சரித்து வந்தனர். ஆனால் தலிபான்கள் அது வரை பெண்களை தாக்கியதில்லை, தந்தை தாக்கப்படலாம் என்பது எண்ணம்.

2012 அக்டோபர் 9. மலாலா தேர்வு முடித்து நண்பகல் பள்ளியில் இருந்து வேன் ஏறுகிறார். வேன் ராணுவ செக் போஸ்டை தாண்டுகிறது. தாடி வைத்த ஒரு இளைஞன் ரோட்டின் குறுக்கே வந்து வேனை கைநீட்டி நிறுத்த சொல்கிறான். நிற்கிறது. டிரைவர் அருகில் அவன் வந்து பேசும் போது இன்னொரு இளைஞன் வேனின் பின்புறம் வருகிறான்.

"யார் மலாலா ?". சக மாணவிகள் யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் அனைவரும் பயத்துடன் மலாலா முகத்தை பார்க்கின்றனர். வேனில் முகத்தை மூடாமல் இருக்கும் ஒரே பெண் மலாலா. உணர்ந்து கொள்கிறான், கேள்வி கேட்டவன். கைத்துப்பாக்கி உயர்கிறது. இடது கண்ணில் குண்டு பாய்கிறது. அடுத்து இடது தோள்பட்டை. உடன் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீதும் குண்டுகள் பாய்கின்றன.

                           

பெஷாவார் ராணுவ மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு இங்கிலாந்து பர்மிங்காம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தலை எலும்பு முறிந்து மூளையில் ஏற்பட்ட அதிவால் வீங்கிவிட்டது. ஒரு முக நரம்பில் ஏற்பட்ட பாதிப்பில் இனி கண்களை திறந்து மூட முடியுமா, மூக்கை அசைக்க முடியுமா, புருவத்தை ஏற்ற முடியுமா, புன்னகைக்க முடியுமா என்ற நிலை எழுந்தது.

எல்லாவற்றையும் தாண்டி வந்தார் மலாலா. லண்டனிலேயே படிக்கிறார். பெண் கல்விக்கான குரலை ஓங்கி ஒலிக்கிறார். தலிபான்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது.

இன்னொருபுறம் பாகிஸ்தானில் மலாலா சி.அய்.ஏ-வின் ஏஜெண்ட் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் சித்தரிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு எதிராகாவும், இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராகவும் ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பம் என்ற குரலும் எழுகிறது.

மலாலாவின் சமீப குரல் "நான் பாகிஸ்தானின் பிரதமராவேன். அதிக நிதியை கல்விக்கு ஒதுக்குவேன். என் மொத்த தேசத்திற்கும் பணிபுரியும் டாக்டராவேன். எல்லா குழந்தைகளும் கல்வி பெற, பள்ளி செல்ல, கல்விதரத்தை உயர்த்த உதவுவேன்".

எதுவாக இருந்தாலும் கல்வியின் தேவையை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கும் குரல் மலாலா, உயிருக்கான அச்சுறுத்தல்களை மீறி. அந்தக் குரல் எல்லா தேசத்திற்கும் தேவையானது. இந்தியாவிற்கும்....

# கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை கொண்டாடும் வேளையில், வாழும் கல்வியின் அடையாளம் மலாலாவின் முழக்கத்தை நடைமுறைப்படுத்த முனைவோம் !